கேம்சேஞ்சர் அல்ல.. அசாதுதீன் ஓவைசிக்கு ஷாக் கொடுத்த இஸ்லாமியர்கள்.. இந்தியா கூட்டணிக்கு சாதகம்!
பாட்னா: பீகார் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கிவிட்ட நிலையில், அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி குறைவாக இருப்பதாக பார்க்கப்படுகிறது. 25 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்டுள்ள ஏஐஎம்ஐஎம் கட்சி, வாக்கு எண்ணிக்கை தொடக்கம் முதலே பின் தங்கி இருப்பது பலரின் விவாதமாக மாறி இருக்கிறது.
பீகார் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. நவம்பர் 6ஆம் தேதி 121 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், நவம்பர் 11ஆம் தேதி 122 தொகுதிகளுக்கான சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. அமைதியாக நடந்த வாக்குப்பதிவில், இம்முறை 66.91 சதவிகிதம் பேர் வாக்களித்தனர்.

51 ஆண்டுகளுக்கு பின் பீகார் தேர்தல் வரலாற்றில் இவ்வளவு அதிக வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியில் இணைந்து போட்டியிட அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி விரும்பியது. ஆனால் இந்தியா கூட்டணி தரப்பில் உரிய பதில் அளிக்கப்படாததால், தனித்து 25 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக அறிவித்தார்.
இஸ்லாமியர்கள் கணிசமாக இருக்கும் தொகுதிகள் என்பதால், இந்தியா கூட்டணியின் வாக்குகள் அதிகளவில் பிரியும் என்று கணிக்கப்பட்டது. இந்த நிலையில் பீகார் வாக்கு எண்ணிக்கை தொடங்கி ஒரு மணி கடந்துள்ள நிலையில், அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி 2 தொகுதியில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது.
கடந்த தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட்ட அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி 5 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அப்போது அந்த தொகுதிகளில் தொடக்கம் முதலே முன்னிலையில் இருந்தன. ஆனால் இம்முறை இஸ்லாமியர்களின் வாக்குகளை அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி முழுமையாக அறுவடை செய்யவில்லை என்று பார்க்கப்படுகிறது.
கடந்த முறையே சில தொகுதிகளில் ஆர்ஜேடி கட்சியின் வேட்பாளர்களின் தோல்விக்கு ஏஐஎம்ஐஎம் கட்சி காரணமாக அமைந்தது. ஆனால் இம்முறை அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சிக்கு வாக்களிப்பது மறைமுகமக என்டிஏ கூட்டணிக்கு சாதகமாக அமையும் என்று இஸ்லாமியர்கள் புரிந்து கொண்டு வாக்களித்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications