சிறுமி பாலியல் பலாத்காரம்.. 5 தோப்புக்கரணம் போதும்! "ஷாக்" தீர்ப்பு வழங்கிய பீகார் கிராம பஞ்சாயத்து
பாட்னா: பீகார் மாநிலத்தில் 5 வயது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கு 5 தோப்புக்கரணம் போட்டால் போதும் என பஞ்சாயத்தில் தீர்ப்பளிக்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கட்டப் பஞ்சாயத்து அமைப்பு முறை குறித்து பல்வேறு விமர்சனங்கள் தொடர்ந்து எழுந்து வரும் நிலையில், பஞ்சாயத்தில் இவ்வாறு தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிய நிலையில் இந்த சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பீகார்
பீகார் மாநிலத்தின் நவாடா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்தியாவில் ஆண்டு தோறும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு பாலியில் குற்றங்கள் அதிகம் நடைபெறும் மாநிலங்களின் வரிசையில் பீகார் மாநிலமும் முன்னிலையில் உள்ளது. கடந்த 2021ம் ஆண்டில் மட்டும் இம்மாநிலத்தில் சுமார் 786 பேர் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இது கடந்த ஆண்டு பதிவான குற்றங்களை விட அதிகமாகும்.

பாலியல் பலாத்காரம்
இவ்வாறு இருக்கையில்தான் சில நாட்களுக்கு முன்னர் நவாடா கிராமத்தில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கிராமத்தில் உள்ள இளைஞன் ஒருவன் தனது வீட்டினருகே விளையாடிக்கொண்டிருந்த 5 வயது சிறுமியிடம் சாக்லேட் வாங்கி தருவதாக கூறியுள்ளார். இதனை நம்பிய சிறுமி இளைஞனுடன் சென்றுள்ளார். இளைஞன் சிறுமியை கடைக்கு அழைத்துச் செல்லாமல் அங்கிருந்து கோழிப்பண்ணைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். பின்னர் சிறிது நேரம் கழித்து வீடு திரும்பிய சிறுமி தொடர்ந்து அழுதுகொண்டே இருந்திருக்கிறார்.

தட்டிக்கழிப்பு
இது குறித்து பெற்றோர் விசாரிக்கையில் சிறுமி தனக்கு நேர்ந்ததை மழலை மொழியில் கூறியிருக்கிறார். இதனையடுத்து பெற்றோர் தங்களது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் ஒன்று திரண்ட உறவினர்கள் சம்பந்தப்பட்ட இளைஞனை பிடித்து பஞ்சாயத்தில் ஒப்படைத்துள்ளனர். ஆனால் பஞ்சாயத்தில் இடம்பெற்றிருந்த ஊர் பெரியவர்கள் இதுகுறித்து பெரியதாக கண்டுகொள்ளவில்லை. சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தரப்பில் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் ஊர் பெரியவர்கள் அதை காதுகொடுத்து கேட்காமல் தட்டிக்கழித்தனர்.

தோப்புக்கரணம்
பெற்றோரும் உறவினரும் விடாமல் தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததையடுத்து பஞ்சாயத்து தலைவர்கள் இந்த குற்றச்சாட்டை அடியோடு மறுத்து, சிறுமியை மறைவான இடத்திற்கு கொண்டு சென்றதுதான் குற்றம் என்றும், சம்பந்தப்பட்ட இளைஞன் வேறு எதையும் செய்யவில்லை என்றும் கூறி மறைவான இடத்திற்கு குழந்தையை அழைத்துச் சென்றதற்காக ஐந்து தோப்புக்கரணம் போட்டால் போதும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளனர். இதனையடுத்து அந்த இளைஞனும் 5 தோப்புகரணத்தை போட்டுள்ளார். இந்த சம்பவம் அங்கிருப்பவர்களால் வீடியோவாக ரெக்காட் செய்யப்பட்டு சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்பட்டுள்ளது.

விளக்கம்
தற்போது இந்த வீடியோ பரவலாக பரவிய நிலையில் சம்பவம் பலர் இந்த வீடியோவை அம்மாநில முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சருக்கு அனுப்பி, இந்த குற்றத்திற்கு தண்டனை இவ்வளவுதானா? என்று கேள்வியெழுப்பியுள்ளனர். மேலும், இவ்வாறான மோசமான குற்றத்தில் ஈடுபட்டவர் தண்டிக்கப்படமாட்டாரா? எனவும் கேள்வியெழுப்பியுள்ளனர். இந்த விஷயம் பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து, சம்பவம் குறித்து FIR பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், குற்றமிழைத்தவர்கள் மீதும், குற்றத்தை மூடி மறைக்க முயன்றவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை கண்காணிப்பாளர் கவுரவ் மங்லா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications