போலி மருத்துவமனைகள் பற்றி செய்தி வெளியிட்ட செய்தியாளர்.. பீகாரில் எரித்துக் கொலை.. உடல் கண்டெடுப்பு!
பாட்னா: பீகாரில் செய்தியாளரும், தகவல் அறியும் உரிமை சட்ட போராளியுமான புத்திநாத் ஜா என்ற இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அவினாஷ் ஜா என்று அழைக்கப்படும் புத்திநாத் ஜா பீகாரில் உள்ள தனியார் செய்தி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். மதுபானி மாவட்டத்தை சேர்ந்த இவர் உள்ளூர் செய்திகளை தொடர்ந்து நேர்மையாக வெளியிட்டு வந்து இருக்கிறார்.
சமீபத்தில் மதுபானி மாவட்டத்தில் செயல்படும் பொய்யான மருத்துவமனைகளை கண்டுபிடித்து பட்டியல் வெளியிட்டுள்ளார். அனுமதி இன்றி இயங்கும் மருத்துவமனைகள் பட்டியலை இவர் பேஸ்புக்கில் ஆதாரத்தோடு வெளியிட்டுள்ளார்.

சீல்
இதையடுத்து உடனடியாக செயல்பட்ட மாவட்ட நிர்வாகமும், சுகாதார துறையும் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சீல் வைத்தது. அனுமதி இன்றி செயல்படும் மருத்துவமனைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. பல மருத்துவமனைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதனால் இந்த செய்தியை வெளியிட்ட புத்திநாத் ஜாவிற்கு நிறைய மிரட்டல் வந்ததாக கூறப்படுகிறது.

மிரட்டல்
போனில் சில மருத்துவமனை நிர்வாகிகள் இவரை மிரட்டி உள்ளனர். இது நிலையில்தான் புத்திநாத் ஜா கடந்த செவ்வாய்க்கிழமை இரவு காணாமல் போனார். அன்று இரவு இவர் போன் பேசியபடி 10 மணிக்கு வீட்டை விட்டு வெளியே சென்று இருக்கிறார். அருகில் இருக்கும் மார்க்கெட் ஒன்றிற்கு சென்றவர் அங்கு ஒருவரை சந்தித்துள்ளார்.

போலீசார்
இதுவரை சிசிடிவி காட்சிகள் பதிவாகி உள்ளது. அதன்பின் இவர் எங்கே சென்றார் என்பது தெரியவில்லை. இந்த நிலையில் போலீசார் கடந்த 4 நாட்களாக இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வந்தனர். மூடப்பட்ட மருத்துவமனைகளின் நிறுவனர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இவரின் போனும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்ததால் இவர் எங்கே இருக்கிறார் என்பதில் குழப்பம் நிலவியது.

உடல்
இதையடுத்து நேற்று அதிகாலை மர்ம உடல் ஒன்று பேட்டூன் என்ற அருகாமை கிராமத்தில் கண்டெடுக்கப்பட்டது. உடல் முழுக்க தீயில் கருகி மோசமான நிலையில் உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்த உடலில் இருந்த மோதிரத்தை வைத்து அது புத்திநாத் ஜா என்று உறவினர்கள் உறுதி செய்தனர். உடலுக்கு தீ வைத்து சாலை ஓரத்தில் புத்திநாத் ஜாவை வீசியது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

பீகார்
பீகாரை இந்த சம்பவம் உலுக்கி உள்ளது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி உள்ளனர். உடலில் தீ வைப்பதற்கு முன் இவர் மோசமாக தாக்கப்பட்டதற்கான அடையாளம் பிரேத பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போலி மருத்துவமனைகள் குறித்து செய்தி வெளியிட்டதற்காக இவர் கொல்லப்பட்டு இருக்கலாமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications