"சாக்கடை குளியல்.." அனாதையாக இருந்த பல லட்சம் பணம்.. சாக்கடையில் அப்படியே பாய்ந்த ஊர் மக்கள்.. ஷாக்
பாட்னா: பீகார் மாநிலத்தில் சாக்கடை கால்வாயில் கட்டுக்கட்டாக பணம் இருந்த சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
பணம் என்றால் பத்தும் செய்யும் என்பார்கள். நமது நாடு மட்டுமின்றி உலகின் எல்லா இடங்களிலும் பணம் இருப்பவர்களுக்கு ஒரு மரியாதை பணம் இல்லாதவர்களுக்கு ஒரு வித மரியாதை என்ற நிலையே இருந்து வருகிறது.
பல நேரங்களில் பணம் இருப்பவர்களுக்கு விதிகளைக் கூட மாற்றி ஸ்பெஷல் சலுகைகள் கூட கிடைக்கவே செய்கிறது. இதனால் ஈஸியாக பணக்காரனாக வேண்டும் என்றே அனைவரும் ஆசைப்படுகிறார்கள்.

ஒடிசா: படங்களில் வருவதைப் போல ஓவர் நைட்டில் ஒரே பாடலில் பணக்காரர்கள் ஆகிவிட வேண்டும் என்ற ஆசை பலருக்கும் உள்ளது. இதனால் எளிமையாகப் பணம் சம்பாதிக்க அனைவரும் எப்போதுமே காத்திருக்கவே செய்கிறார்கள். யோசித்துப் பாருங்கள் கட்டுக்கட்டாக கரன்சி நோட்டுகள் மொத்தமாக வாய்க்காலில் இருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள். இதனிடையே அப்படியொரு ஜாக்பாட் வாய்ப்பு தான் பீகார் மக்களுக்குக் கிடைத்துள்ளது.
பீகார் மாநிலம் ரோஹ்தாஸ் மாவட்டத்தில், மொராதாபாத் கிராமத்தில் உள்ள கழிவுநீர் கால்வாயில் கட்டுக்கட்டாக பணம் இருந்துள்ளது. இதைப் பார்த்தவுடன் கழிவுநீர் கால்வாயில் பாய்ந்த மக்கள் ரூபாய் நோட்டுகளை அள்ளிச் சென்றனர். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் டிரெண்டானது.
அங்கு ஏராளமானோர் சாக்கடையில் பாய்ந்து ரூ.2,000, ரூ.500, ரூ.100 மற்றும் ரூ.10 மதிப்புள்ள கரன்சி நோட்டுகளை அள்ளிச் செல்வதை அந்த வீடியோவில் பார்க்க முடிந்தது.

டிரெண்டிங்க வீடியோ: நேற்று காலை அந்த வழியாகச் சென்ற சிலர் சாக்கடைக்குள் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகளைக் கொண்ட பைக்கள் இருப்பதைப் பார்த்துள்ளனர். உடனே அந்த சாக்கடை கால்வாயில் இறங்கிய அந்த கிராம மக்கள் ரூபாய் நோட்டுகளை அள்ளிச் சென்றார்கள். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பைக் கிளப்பியது.
இது தொடர்பான தகவல் அருகே உள்ள போலீசாருக்கு கிடைத்து அவர்கள் சம்பவ இடத்திற்கு வரும் முன்னரே, அனைத்து ரூபாய் நோட்டுகளையும் அங்கிருந்த மக்கள் அள்ளிச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், கால்வாயில் இதுபோல கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் வீசி சென்றது யார் என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

அந்த ரூபாய் நோட்டுகள் உண்மையானதா அல்லது போலியா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். அது போலி நோட்டுகளாகவே இருக்கும் என்றும் போலீசாருக்கு பயந்து அவர்கள் இதுபோல செய்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.
இதற்கு முன்பும் தமிழ்நாடு உள்ளிட்ட பல இடங்களில் இதுபோல கட்டுக்கட்டாக பணம் பொது இடத்தில் கண்டறியப்பட்டுள்ளன. இருப்பினும், கடைசியில் அவை போலி ரூபாய் நோட்டுகளாகவே இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications