Bihar Polls: நெருங்கும் பீகார் தேர்தல்.. கல்வித்துறைக்கு அள்ளி கொடுத்த நிதிஷ் குமார்! வெற்றிக்கு உதவுமா?
பாட்னா: பீகார் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. இந்நிலையில், பள்ளி கல்வித்துறை ஊழியர்களுக்கு பல்வேறு சிறப்பு அறிவிப்புகளை மாநில முதல்வர் நிதீஷ் குமார் அறிவித்திருக்கிறார். இதனால் கல்வித்துறை பணியாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மதிய உணவுத் திட்ட சமையல்காரர்களுக்கான மாதாந்திர உதவித்தொகை ரூ. 1,650-லிருந்து ரூ. 3,300 ஆகவும், அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இரவுப் பணியாளர்களுக்கான உதவித்தொகை ரூ. 5,000-லிருந்து ரூ. 10,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது என முதல்வர் நிதீஷ் குமார் தனது சமூக வலைத்தளப் பதிவில் தெரிவித்துள்ளார்.

உதவித் தொகை
அதேபோல், உடற்கல்வி மற்றும் சுகாதாரப் பயிற்றுநர்களுக்கான மாதாந்திர உதவித்தொகையும் ரூ. 8,000-லிருந்து ரூ. 16,000 ஆக இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கான வருடாந்திர ஊதிய உயர்வு ரூ. 200-லிருந்து ரூ. 400 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அர்ப்பணிப்பு
கல்வித்துறையை வலுப்படுத்துவதில் சமையல்காரர்கள், இரவுப் பணியாளர்கள், உடற்கல்வி மற்றும் சுகாதாரப் பயிற்றுநர்கள் முக்கியப் பங்கு வகித்துள்ளனர். இந்த உயர்வு அவர்களின் மன உறுதியை அதிகரிக்கும் என்றும், மேலும் உற்சாகத்துடனும் அர்ப்பணிப்புடனும் பணியாற்ற ஊக்குவிக்கும் என்றும் நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
கல்வித்துறை
கடந்த 2005ம் ஆண்டு நவம்பர் மாதம் நிதீஷ்குமார் பீகார் முதல்வராக தேர்வானார். அவர் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, மாநிலத்தின் கல்வி முறையை மேம்படுத்த தொடர்ச்சியாகப் பணியாற்றி வருவதாகவும், அப்போது கல்விக்கான மொத்த பட்ஜெட் ரூ. 4,366 கோடியாக இருந்த நிலையில், தற்போது அது ரூ. 77,690 கோடியாக உயர்ந்துள்ளது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். ஆசிரியர்கள் நியமனம், புதிய பள்ளி கட்டிடங்கள் கட்டுதல், மற்றும் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துதல் போன்றவற்றால் கல்வித்துறையில் பெரிய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
தற்போது, பீகார் அரசு தனது 70,202 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தை செயல்படுத்துகிறது. மேலும், மாநிலம் முழுவதும் சுமார் 10,000 அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் உடற்கல்வி, சுகாதாரப் பயிற்றுநர்கள் மற்றும் இரவுப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, மதிய உணவுத் திட்ட சமையல்காரர்கள் கடந்த பல ஆண்டுகளாக தங்கள் உதவித்தொகையை உயர்த்தக் கோரி போராட்டங்கள் நடத்தினர். இந்த அறிவிப்பானது, மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, முதலமைச்சர் நிதீஷ் குமார் மக்களுக்கு நலத்திட்டங்களை அறிவிக்கும் தொடர்ச்சியான நடவடிக்கைகளில் ஒன்றாக அமைந்துள்ளது.
நலத்திட்டங்கள்
இதற்கு முன்னதாக, முதியோர்கள், கணவனை இழந்தவர்கள், மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத்தை ரூ. 400-லிருந்து ரூ. 1,100 ஆக உயர்த்தியது, வீட்டு உபயோக நுகர்வோருக்கு மாதம் 125 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவதாக அறிவித்தது, மற்றும் சுகாதாரத் துறையில் பணிபுரியும் 90,000-க்கும் மேற்பட்ட ஆஷா பணியாளர்கள் மற்றும் 7,500 மம்தா பணியாளர்களுக்கான ஊக்கத்தொகையை உயர்த்தியது போன்ற பல்வேறு நலத்திட்டங்களையும் அவர் அறிவித்திருந்தார்.
கடந்த சில ஆண்டுகளாக கல்வித்துறை பணியாளர்கள் தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வந்திருந்தனர். இதன் தொடர்ச்சியாகவே இந்த அறிவிப்பு வந்திருக்கிறது. தேர்தல் காரணமாகவே அறிவிப்பு வெளியாகியுள்ளது என்றும், இத்தனை நாள் ஏன் கோரிக்கைகள் கண்டுக்கொள்ளப்படவில்லை எனவும்? கேள்வி எழுந்திருக்கிறது.












Click it and Unblock the Notifications