பீகாரில் தலித்துகள் வீடுகள் எரிப்பு- மாயாவதி, ராகுல் கண்டனம்- 10 'குடிசை கொளுத்திகள்' கைது!
பாட்னா: பீகாரில் தலித்துகளில் இருபிரிவினரிடையேயான மோதலில் 21 குடிசை வீடுகள் எரித்து சாம்பலாக்கப்பட்டன. இதனையடுத்து தலித்துகளில் மற்றொரு பிரிவைச் சேர்ந்த 10 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பீகாரில் தலித்துகளின் வீடுகள் எரிக்கப்பட்டதற்கு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பீகார் மாநிலத்தின் நவாடா மாவட்டத்தில் தலித்துகளான ரவிதாஸ், மாஞ்ஜி மற்றும் பஸ்வான் ஜாதிகள் கணிசமாக வசிக்கின்றனர். ரவிதாஸ், மாஞ்ஜி ஜாதியினர் தங்களது வீடுகளை காலி செய்ய வேண்டும் என நிலத்தகராறு ஒன்றில் பஸ்வான் ஜாதியினர் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். இதனை ரவிதாஸ், மாஞ்ஜி பிரிவினர் ஏற்க மறுத்துள்ளனர்.

இதனையடுத்து ரவிதாஸ், மாஞ்ஜி ஜாதியினரின் 80 குடிசைகள் அமைக்கப்பட்டிருந்த குடியிருப்புக்கு பஸ்வான் ஜாதியினர் தீ வைத்து எரித்தனர். இதில் 21 குடிசைகள் எரிந்து சாம்பலாகின. இதனால் நவாடா மாவட்டத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
இச்சம்பவத்துக்கு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ராகுல் காந்தி கூறுகையில், நவாடாவில் உள்ள மகாதலித் காலனி முழுமையாக எரிக்கப்பட்டு, 80க்கும் மேற்பட்ட குடும்பங்களின் வீடுகள் அழிக்கப்பட்டுள்ளது. பீகாரில் தலித்துகளுக்கு எதிரான அநீதியின் பயங்கரத்தை இது படம்போட்டுக் காட்டுகிறது. வீடு, உடைமைகளை இழந்த தலித் குடும்பங்களின் அலறல்களும், கடுமையான துப்பாக்கிச் சூட்டின் எதிரொலியால் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் உருவாக்கப்பட்ட பயங்கரமும், தூங்கிக் கொண்டிருந்த பீகார் அரசை எழுப்புவதில் வெற்றி பெறவில்லை.
இத்தகைய அராஜகங்கள் பாஜக மற்றும் அதன் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) கட்சிகளின் தலைமையின் கீழ் தஞ்சம் அடைகின்றன - அவர்கள் இந்தியாவின் தலித்துகளை அச்சுறுத்தி ஒடுக்குகிறார்கள், அதனால் அவர்கள் தங்கள் சமூக மற்றும் அரசியலமைப்பு உரிமைகளைக் கூட கோர முடியவில்லை. மேலும், பிரதமரின் மௌனம் இந்த பெரிய சதிக்கு ஒப்புதல் முத்திரையாக உள்ளது. பீகார் அரசும், மாநில காவல்துறையும் இந்த வெட்கக்கேடான குற்றத்தில் ஈடுபட்ட அனைத்து குற்றவாளிகள் மீதும் உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மறுவாழ்வு அளித்து அவர்களுக்கு முழுமையான நீதியை வழங்க வேண்டும் என்றார்.
மேலும் இச்சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த பீகார் முதல்வர் நிதிஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். இதனடிப்படையில் பஸ்வான் ஜாதியைச் சேர்ந்த 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள்தான் ரவிதாஸ், மாஞ்ஜி ஜாதியினரின் குடிசைகளை தீ வைத்து எரித்ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்துக்கு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மல்லிகார்ஜூன கார்கே கூறுகையில், பீகார் மாநிலம் நவாடாவில் உள்ள மகாதலித் காலனியில் நடந்த அட்டூழியங்கள், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் இரட்டை எஞ்சின் அரசுடைய காட்டு ராஜ்ஜியத்திற்கு மற்றொரு சான்றாகும். சுமார் 100 தலித் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது, ஏழைக் குடும்பங்களின் வாழ்க்கை அனைத்தும் இரவின் இருளில் பறிக்கப்பட்டது மிகவும் கண்டிக்கத்தக்கது. தலித்துகள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள்மீது குற்றவியல் புறக்கணிப்பு மற்றும் சமூக விரோத சக்திகளை ஊக்குவித்தல் ஆகியவற்றின் மீதான பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் முழுமையான அலட்சியம் இப்போது உச்சத்தில் உள்ளது. பிரதமர் மோடி வழக்கம் போல் மௌனம் சாதிக்கிறார். அதிகாரப் பேராசையில் நிதீஷ்குமார் கவலையில்லாமல் இருக்கிறார். தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் வாயடைத்துப் போயுள்ளன என்றார்.












Click it and Unblock the Notifications