குடிகார கணவருக்கு ‛குட்பை’.. கடன் கொடுத்த ஏஜென்ட்டை கணவராக மாற்றிய பெண்! குமுறும் குடும்பம்
பாட்னா: பீகாரில் மதுபானம் குடித்து அடித்து துன்புறுத்திய கணவரை விட்டுவிட்டு கொடுத்த கடனை திரும்ப கேட்க வந்த இளைஞரை பெண் ஒருவர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பீகார் மாநிலம் ஜாமுவை மாவட்டத்தை சேர்ந்தவர் இந்திர குமாரி. இவருக்கு கடந்த 2022ம் ஆண்டில் திருமணம் நடந்தது. கணவர் பெயர் நகுல் ஷர்மா. இவருக்கு மதுபானம் குடிக்கும் பழக்கம் உள்ளது.

இதனால் அடிக்கடி நகுல் ஷர்மா மதுபானம் குடித்து வீட்டுக்கு வந்துள்ளார். அதுமட்டுமின்றி இந்திர குமாரியை அவர் அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். அதோடு நகுல் ஷர்மா வேலைக்கும் சரியாக செல்வது இல்லை.
இதனால் நகுல் ஷர்மா மற்றவர்களிடம் கடனும் வாங்கி செலவு செய்துள்ளார். சமீபத்தில் நகுல் ஷர்மா, தனியார் கடன் நிறுவனத்தில் இருந்து கடன் வாங்கி உள்ளார். இந்த கடன் மற்றும் வட்டியை நகுல் ஷர்மாவால் திரும்ப செலுத்த முடியவில்லை. இதனால் அந்த நிறுவனத்தில் பணியாற்றி வரும் பவன் குமார் யாதவ் என்பவர் அடிக்கடி நகுல் ஷர்மாவின் வீட்டுக்கு சென்று வட்டி தொகை மற்றும் கடன் தொகையை திரும்ப செலுத்தும்படி கேட்டு வந்துள்ளார்.
இந்த வேளையில் பவன் குமார் யாதவ் மற்றும் நகுல் ஷர்மாவின் மனைவி இந்திர குமாரிக்கு இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் முதலில் நட்பாக மாறியது. இருவரும் செல்போன் எண்களை பகிர்ந்து பேச தொடங்கினர். இந்த பழக்கம் நாளடைவில் இன்னும் நெருக்கமாகி உள்ளது. இந்திர குமாரி தனது கணவர் நகுல் ஷர்மா குடித்துவிட்டு வந்து தன்னை தாக்கி துன்புறுத்துவது பற்றி பவன் குமார் யாதவிடம் தெரிவித்துள்ளார்.
இது இந்திர குமாரி மீது அவருக்கு பரிவை ஏற்படுத்தி உள்ளது. இந்திர குமாரிக்கு அவர் தொடர்ந்து ஆறுதல் கூறி வந்துள்ளார். அதோடு செலவுக்கு அவ்வப்போது பணத்தையும் வழங்கி உள்ளார். இதனால் இந்திர குமாரிக்கு, பவன் குமார் யாதவ் மீதான அன்பு அதிகரித்தது. இருவருக்கும் இடையேயான நட்பு என்பது காதலாக மாறி தொடங்கியது.
இதையடுத்து இருவரும் யாருக்கும் தெரியாமல் சந்திக்க தொடங்கினர். மேற்கு வங்க மாநிலம் அசனால் பகுதிக்கு இந்திர குமாரியை, பவன் குமார் யாதவ் சுற்றுலா அழைத்து சென்றுள்ளார். அதன்பிறகு இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி குடிகார கணவரை கைவிட்ட இந்திர குமாரி, பவன் குமார் யாதவை கரம் பிடித்தார். இவர்களின் திருமணம் கோவிலில் வைத்து நடந்தது.
இந்த திருமணத்துக்கு பவன் குமார் யாதவின் குடும்பத்தினர் ஆதரவு தெரிவித்தனர். இருப்பினும் இந்திர குமாரியின் கணவர் நகுல் ஷர்மா மற்றும் அவரது குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தனது மனைவியை கடத்தி சென்று பவன் குமார் யாதவ் திருமணம் செய்ததாக நகுல் ஷர்மா சார்பில் போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்த புகாரை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது இந்திர குமாரி விருப்பத்துடன் தான் பவன் குமார் யாதவை திருமணம் செய்ததாக தெரிவித்தார். இருப்பினும் புகாரின் பேரில் போலீசார் பவன் குமார் யாதவ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications