அதிகாலையிலேயே குலுங்கிய பூமி.. பீகார், மேற்கு வங்க மாநிலங்களில் திடீர் நிலநடுக்கம்.. பீதியில் மக்கள்
பாட்னா: பீகார் மாநிலம் அராரியா மற்றும் மேற்கு வங்க மாநிலம் சிரிகுரி பகுதிகளில் இன்று அதிகாலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.3 என பதிவான இந்த நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்தனர்.
வெளிநாடுகளிலும், இந்தியாவிலும் பல்வேறு இடங்களில் தற்போது அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்தியாவை பொறுத்தமட்டில் நிலநடுக்கங்கள் என்பவை சக்தி வாய்ந்ததாக இல்லை. இதனால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம், சேதங்கள் ஏற்படுவது இல்லை.
இருப்பினும் கூட பல இடங்களில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருவது என்பது தொடர் கதையாக உள்ளன. குறிப்பாக வடஇந்திய மாநிலங்களில் ஆங்காங்கே மக்கள் நிலஅதிர்வை உணர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் தான் இன்று பீகார் மாநிலம் அராரியாவில் திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதிகாலை 5.35 மணிக்கு அராரியா பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமிக்கடியில் 10 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டிருந்த இந்த நிலநடுக்கத்தை மக்கள் லேசாக உணர்ந்ததாக கூறப்படுகிறது.
மேலும் அராரியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதை தேசிய நிலஅதிர்வு மையமும் உறுதி செய்துள்ளது. இதுபற்றி அந்த மையம், ‛‛ இன்று காலை 5.35 மணிக்கு அராரியாவில் பூமிக்கடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டரில் 4.3 என்ற அளவில் பதிவாகி உள்ளது'' என தெரிவித்துள்ளது.
மேலும் இன்று அதிகாலை 5.35 மணிக்கு பீகாரை போல் அதே அளவில் மேற்கு வங்க மாநிலம் சிலிகுரி பகுதியிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது சிலிகுரியில் இருந்து தென்மேற்கு பகுதியில் 140 கிலோமீட்டர் ஆழத்தில் நிலை கொண்டிருந்ததாக தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று அதிகாலையில் பீகார், மேற்கு வங்காளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் அங்கு அதிர்ஷ்டவசமாக சேதம், உயிர் பலி எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும் கூட மக்கள் பீதியடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications