பீகார்: நேற்று, இன்று, நாளை.. தமிழ்நாட்டில் தாக்கத்தை ஏற்படுத்திய பாட்டாலிபுரத்து மன்னர்கள்
பாட்னா: பீகார் மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. எனவே அம்மாநிலம் கவனம் பெற்றிருக்கிறது. அரசியலை தாண்டி, பீகாரின் வரலாறு உள்ளிட்ட விஷயங்களை 'ஒன் இந்தியா தமிழ்' தொகுத்து வழங்கி வருகிறது. இந்த தொகுப்பில் இதற்கு முன்னர் மௌரிய பேரரசு வீழ்ந்தது எப்படி? இதற்கு வேத மதம் எப்படி காரணமாக அமைந்தது என்பது குறித்து பார்த்தோம். இதில், பாட்டாலிபுரத்தை தலைநகராக கொண்ட பீகார் மன்னர்களுக்கும் தமிழ்நாட்டிற்குமான தொடர்பு பற்றி பார்ப்போம்.
மௌரியப் பேரரசின் கடைசி அரசனான பிருஹத்ரதனை அவனது தளபதியான, சுங்க வம்சத்தை சேர்ந்த புஷ்யமித்ர சுங்கன் கொலை செய்து ஆட்சியை கைப்பற்றினான். வரலாற்று ரீதியாக பௌத்தத்திற்கு எதிரான பிராமணியத்தின் பழிவாங்கலாக கூட இது பார்க்கப்படுகிறது. இப்படி ஆட்சிக்கு வந்த சுங்க வம்சம், கி.மு. 185 முதல் கி.மு. 75 வரை சுமார் 112 ஆண்டுகள் ஆட்சி செய்தது.

சுங்க வம்சம்
ஆட்சிக்காலம் கொஞ்சம் பெரியதாக இருந்தாலும் இவர்களை பற்றி சொல்வதற்கென தனிச்சிறப்பு வாய்ந்த விஷயங்கள் எதுவும் கிடையாது. இவர்கள் காலத்தில் பௌத்தம் வீழ்ச்சியடைந்தது. பௌத்த சிற்பங்கள், கலைகூடங்கள் அழிக்கப்பட்டன. அதற்கு பதிலாக பிராமணியம் வளர்ந்தது. சுங்க வம்சத்தின் கடைசி அரசர் தேவபூதி ஆவார். இவர் தனது மந்திரி வாசுதேவ கன்வாவால் கி.மு. 75-ல் கொல்லப்பட்டார். இதன் பிறகு, கன்வ வம்சம் ஆட்சிக்கு வந்தது.
சுங்க வம்சத்தின் வீழ்ச்சி
கன்வ வம்சத்தின் ஆட்சிக்காலம் மிகச்சிறியது. இந்த வம்சம் கி.மு. 75 முதல் கி.மு. 30 வரை, சுமார் 45 ஆண்டுகள் மட்டுமே ஆட்சி செய்தது. இவர்கள் காலத்திலும் பிராமண சமயத்தின் வளர்ச்சி செழிப்பாக இருந்தது. இருப்பினும் குறைந்த காலத்தில் கன்வ வம்சத்தின் கடைசி அரசனான சுசர்மன், சாதவாகன வம்சத்தின் ஒரு மன்னனால் தோற்கடிக்கப்பட்டார். எனவே ஆட்சி அதிகாரம் சாதவாகன வம்சத்திடம் சென்றது.
தமிழகத்துடன் தொடர்பு
மௌரியர்களுக்கு பிறகு தக்காணப் பகுதியில் ஆட்சிக்கு வந்த பலமான அரசாக சாதவாகன வம்சம் இருந்தது. இவர்களின் முதல் அரசன் சிமுகா கொஞ்ச காலம் வரை பீகாரின் பாட்டாலிபுரத்தை ஆட்சி செய்தார். ஆனால் அதன் பின்னர் கவனம் முழுவதும் தென்னிந்தியா பக்கம் திரும்பியது. இந்த வம்சத்தை சேர்ந்தவர்கள் தங்கள் தலைநகரை மகாராஷ்டிராவுக்கு மாற்றிக்கொண்டனர். உருவங்களை பொறித்த நாணயங்களை கொண்டு ஆட்சியை நடத்தினர். இவர்களின் நாணயங்களில் தமிழ், பிராகிருத எழுத்துக்களும் பொறிக்கப்பட்டிருந்தன என சொல்லப்படுகிறது. ஆனால் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட நாணயத்திற்கான ஆதாரம் கிடைக்கவில்லை. இதன் மூலம் இவர்களுக்கும் தமிழ் சமூகத்திற்கும் இருந்த உறவு வெளிப்படுகிறது.
இவர்கள் காலத்தில் தமிழ்நாட்டின் சில பகுதிகளை பல்லவர்கள் ஆண்டனர். சாதவாகன வம்சத்தின் தளபதிகளாக இருந்த பல்லவர்கள் பின்னர் தங்களை தனி அரசாக அறிவித்துக்கொண்டனர். இப்படித்தான் தமிழ்நாட்டில் பல்லவ சாம்ராஜ்யம் வளர்ந்தது.
குப்த பேரரசு
சாதவாகன வம்சத்தின் ஆட்சியிலும் பிராமணியம் செழித்து வளர்ந்தது. அதே சமயம் பௌத்தம் உள்ளிட்ட மதங்களுக்கும் உதவிகள் செய்யப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்த ஆட்சியின் முடிவில்தான் குப்த பேரரசு தோன்றியது. இது ஒர வரலாற்று தருணமாகும். இன்று இந்தியா அறிவுசார் துறையில் முன்னோடி என்பதை நிரூபிக்க நமக்கிருக்கும் சான்றுகளை குப்த பேரரசு காலம்தான் விட்டு சென்றிருக்கிறது. குப்த பேரரசின் வளர்ச்சி, அது இந்தியாவுக்கு கொடுத்த கொடை உள்ளிட்டவை குறித்து அடுத்த பகுதியில் பார்ப்போம்.












Click it and Unblock the Notifications