தமிழகத்தில் வட இந்தியர்கள் கொல்லப்படுவதாக வதந்தி கிளப்பிய யூடியூபர் மணீஷ் காஷ்யப் பாஜகவில் ஐக்கியம்!
பாட்னா: தமிழ்நாட்டில் வட இந்திய தொழிலாளர்கள் (புலம் பெயர் தொழிலாளர்கள்) அடித்து படுகொலை செய்யப்படுவதாக வதந்தி பரப்பியதால் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பீகார் யூடியூபர் மணீஷ் காஷ்யப் பாஜகவில் இணைந்துள்ளார்.
கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் வட இந்திய தொழிலாளர்கள் படுகொலை செய்யப்படுவதாக வீடியோக்கள் மூலம் திடீரென வதந்தி பரவியது. இது தமிழ்நாட்டிலும் வட இந்தியாவிலும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. பீகார், ஜார்க்கண்ட் மாநில அரசுகள், தமிழ்நாட்டுக்கு அரசு குழுவை அனுப்பி ஆய்வும் செய்தது. திருப்பூர், கோவை உள்பட பல இடங்களில் பணி செய்யும் பீகார் மாநில தொழிலாளர்களை அந்தக் குழுவினர் சந்தித்தனர். அப்போது பீகார் தொழிலாளர்கள் நலமாக உள்ளதாகவும், எந்த அச்சுறுத்தலும், தாக்குதலும் நடைபெறவில்லை எனவும் திட்டவட்டமாகவே தெரிவித்தனர்.

இது தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட்டன. இந்த விசாரணைகளின் போது பாஜகவினரே திட்டமிட்டு பொய்யான இத்தகைய வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்பிவிட்டிருப்பது தெரியவந்தது. இத்தகைய
வீடியோக்களை திட்டமிட்டு பரப்பியவர்கள் மீதும் நடவடிக்கை பாய்ந்தது.
இதன் ஒருபகுதியாக பீகாரில் யூடியூபர் மணீஷ் காஷ்யப் தமிழ்நாடு போலீசாரால் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
வட இந்தியாவில் இத்தகைய மணீஷ் காஷ்யப்புகளை சில அரசியல் கட்சிகள் வதந்திகளை பரப்புவதற்காகவே பணம் கொடுத்து அமர்த்தி இருப்பதும் பின்னர் தெரியவந்தது.
இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கும் நடந்தது. தமிழ்நாட்டில் வட இந்திய தொழிலாளர்கள் கொல்லப்படுவதாக வதந்தி பரப்பியதால்தான் மணீஷ் காஷ்யப் மீது பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது என தமிழ்நாடு அரசு ஆணித்தரமாக வாதிட்டது.
இந்த வழக்குகளில் ஜாமீன் பெற்ற மணீஷ் காஷ்யப் டெல்லியில் இன்று பாஜகவில் இணைந்தார். டெல்லி பாஜக எம்பி மனோஜ் திவாரி முன்னிலையில் மணீஷ் காஷ்யப், பாஜகவில் இணைந்தார்.
இது தொடர்பாக மணீஷ் காஷ்யப் கூறுகையில், நான் சிறையில் இருந்து வெளியே வர காரணமே பாஜக எம்பி மனோஜ் திவாரிதான். ஆகையால்தான் பாஜகவில் நான் இணைந்துள்ளேன். எனக்கு ஜாமீன் மட்டும் கிடைக்கவில்லை. என் மீதான அனைத்து வழக்குகளும் கைவிடப்பட்டுள்ளன. தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழும் விடுவிக்கப்பட்டுள்ளேன். சனாதன தர்மத்தை யார் இழிவுபடுத்தினாலும் அவர்களுக்கு எதிரான என் போராட்டம் தொடரும் என்றார்.












Click it and Unblock the Notifications