அமலாக்கத்துறைக்கு எல்லாம் பயப்பட மாட்டேன்.. என் வீட்டில் கூட வந்து தங்குங்க.. தேஜஸ்வி யாதவ் சுளீர்
பாட்னா: "பாஜகவின் அச்சுறுத்தல்களுக்கு எல்லாம் அடிபணிய மாட்டேன்; அமலாக்கத்துறையினர் எனது வீட்டில் கூட வந்து தங்கிக் கொள்ளட்டும்; அதுபற்றி எனக்கு கவலையில்லை" என்று பிகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார்.
பிகாரில் பாஜக உடனான கூட்டணியை முறித்துக் கொண்ட நிதிஷ் குமார் தனது முதல்வர் பதவியை அதிரடியாக ராஜினாமா செய்தார். பின்னர் தனது அரசியல் எதிரியான லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகளுடன் கூட்டணி அமைத்து மீண்டும் பிகார் முதல்வராக நிதிஷ் குமார் பதவியேற்றுள்ளார். துணை முதல்வராக ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் பொறுப்பேற்றுள்ளார்.நிதிஷ் குமாரின் இந்த நடவடிக்கையால் பாஜக கடும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், நிதிஷ் குமாருக்கு ஆதரவு அளித்ததற்காக ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர்கள் மீது வருமான வரி சோதனை உள்ளிட்ட நடவடிக்கைகள் பாயும் என அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த சூழலில், தனியார் ஆங்கில தொலைக்காட்சிக்கு தேஜஸ்வி யாதவ் இன்று பேட்டியளித்துள்ளார். அப்போது நெறியாளர், "நிதிஷ் குமாருடன் கூட்டணி அமைத்துள்ளதால் வருமான வரித் துறை, அமலாக்கத்துறை மூலம் உங்களுக்கு பாஜக நெருக்கடி கொடுக்கும் எனக் கூறப்படுகிறேதே?" என்று கேள்வியெழுப்பினார்.
அதற்கு பதிலளித்து தேஜஸ்வி யாதவ் கூறியதாவது:
அமலாக்கத்துறை, சிபிஐ, வருமானவரித் துறை ஆகிய அமைப்புகள் பாஜகவின் கட்சிப் பிரிவுகள் போல செயல்படுகின்றன. யார் தங்களை எதிர்த்தாலும் உடனே அவர்கள் மீது இந்த அமைப்புகளை பாஜக ஏவி விடுவது வாடிக்கையாகி விட்டது. என்னை பொறுத்தவரை, பாஜகவின் இந்த அச்சுறுத்தல்களுக்கு ஒருபோதும் நான் அடிபணிய மாட்டேன்.
இந்தப் பேட்டியின் வாயிலாக அமலாக்கத்துறை, வருமானவரித் துறை ஆகியவற்றுக்கு நான் அழைப்பு விடுக்கிறேன். ஏன் அடிக்கடி எனது வீட்டுக்கு வருவதும் போவதுமாய் இருக்கிறீர்கள்? இந்த அலைச்சல் உங்களுக்கு வேண்டாம். எனது வீட்டிலேயே நீங்கள் தங்கிக் கொள்ளலாம். அது உங்களுக்கு இன்னும் சவுகரியமாக இருக்கும் என அவர் கூறினார்.
ஏற்கனவே பல்வேறு ஊழல் வழக்குகளில் லாலு பிரசாத் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், அவர் ரயில்வே அமைச்சராக இருந்த போது முறைகேடாக ஒப்பந்தங்களை வழங்கியதாக புதிய வழக்கு ஒன்றை அமலாக்கத்துறை பதிவு செய்துள்ளது.
இதில் லாலு பிரசாத்தின் மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி யாதவ், மகள் மிசாபார்தி ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதனால் அவ்வப்போது அவர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications