ஜார்க்கண்ட் இயக்கம் கண்ட முதுபெரும் இடதுசாரி தலைவர் ஏ.கே. ராய் காலமானார்!
பாட்னா: முதுபெரும் இடதுசாரித் தலைவரான ஏ.கே. ராய் (வயது 90) இன்று உடல்நலக் குறைவால் காலமானார்.
1967-ல் பீகார் சட்டசபை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக போட்டியிட்டு வென்றார். ஆனால் கட்சியுடன் கொள்கை முரண்பாடுகள் ஏற்பட்டதால் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மார்க்சிஸ்ட் ஒருங்கிணைப்பு குழு என்ற தனி அமைப்பை உருவாக்கினார்.

பின்னர் சிபுசோரன் மற்றும் மறைந்த எம்.பி. பினோத் பீகாரி மக்தோ ஆகியோருடன் இணைந்து 1971-ல் தனி ஜார்க்கண்ட் மாநில கோரிக்கைக்கான இயக்கத்தைத் தொடங்கினார். இவர்களது தொடர் போராட்டங்கள், முயற்சிகளால்தான் 2000-ம் ஆண்டு பீகாரில் இருந்து ஜார்க்கண்ட் தனி மாநிலம் உதயமானது.
தன்பாத் லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு 1977,1980 மற்றும் 1989 தேர்தல்களில் வென்றார். 1967, 1969 மற்றும் 1972 பீகார் சட்டசபை தேர்தல்களில் சிந்த்ரி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாகவும் பணியாற்றினார்.
தற்போதைய வங்கதேசத்தில் உள்ள சாபுரா கிராமத்தில் பிறந்து கொல்கத்தா பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றார். தொழிற்சங்கவாதியாக, இடதுசாரி சித்தாந்தத்தில் தீவிர நம்பிக்கை உள்ளவராக வாழ்ந்த ஏ.கே. ராய் முதுமை மற்றும் உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.












Click it and Unblock the Notifications