பிரசாந்த் கிஷோர் போடும் மெகா பிளான்.. "களத்தில் இறங்கும் ஒரு கோடி பேர்.." உற்று கவனிக்கும் நிதிஷ்!
பாட்னா: பீகார் மாநிலத்தில் ஜன் சுராஜ் என்ற அரசியல் கட்சியைத் தொடங்க இருக்கும் பிரசாந்த் கிஷோர், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது நிதிஷ்குமாரை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசிய பிரசாந்த் கிஷோர், மக்கள் நலனில் நிதிஷுக்கு அக்கறை இல்லை என சாடினார். மேலும், வரும் அக். 2ம் தேதி ஒரு கோடி பேர் ஜன் சுராஜ் கட்சியின் தொடக்க விழாவில் கலந்து கொள்ள இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
லோக்சபா தேர்தலுக்குப் பிறகு நரேந்திர மோடி 3வது முறையாகப் பிரதமராகப் பதவியேற்றுள்ள போதிலும், அவர் ஆட்சியைத் தக்கவைக்க இப்போது ஜேடியு மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகளின் ஆதரவு கண்டிப்பாகத் தேவை என்ற சூழலே நிலவுகிறது.

விமர்சனம்: இதற்கிடையே முன்னாள் தேர்தல் ஆலோசகரும் அரசியல்வாதியுமான பிரசாந்த் கிஷோர் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரை கடுமையாக விமர்சித்துள்ளார். மத்தியில் இப்போது பாஜக அரசு கவிழாமல் இருக்க ஆதரவு தேவை என்ற சூழல் இருக்கும் போதும் கூட, அதைப் பயன்படுத்தி பீகார் மாநிலத்திற்குத் தேவையான நலத்திட்டங்களைப் பெற நிதிஷ்குமார் தவறிவிட்டதாக பிரசாந்த் கிஷோர் விமர்சித்துள்ளார்.
மத்திய அமைச்சரவையில் கூடுதல் இலாக்காகளை பெறுவதிலும் மாநிலத்தில் தனது எதிரிகளை காலி செய்வதிலும் மட்டுமே ஆர்வம் காட்டும் நிதிஷ்குமார், பீகாருக்கு தேவையான நலத்திட்டங்களைப் பெறத் தவறிவிட்டதாக விமர்சித்துள்ளார்.
புதிய கட்சி தொடங்கும் தேதியை அறிவித்தார் "கிங் மேக்கர்" பிரசாந்த் கிஷோர்.. முதல் தலைவர் இவர் தானாம்!
.
வீணடிப்பு: இது தொடர்பாக அவர் பேசுகையில், "பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து தேவை என மக்கள் கூறுகிறார்கள். பீகாரில் பல ஆண்டுகளாக நலிந்து வரும் 20 சர்க்கரை ஆலைகளை மீட்டெடுக்க நிதிஷ் குமார் அழுத்தம் கொடுக்கவில்லை? இது ஒரு உதாரணம்.. இது போல மாநிலத்திற்குத் தேவையான பல வாய்ப்புகளை அவர் வீணடித்துள்ளார்.
ஆனால், நிதிஷ் குமாருக்கு இது பற்றி எல்லாம் துளியும் கவலையில்லை.. மத்தியில் தனது கட்சிக்கு எத்தனை அமைச்சர் பதவி கிடைக்கும் என்பது மட்டுமே அவரது கவலை.. தனக்கு எதிராக இருப்போரை காலி செய்வதில் மட்டுமே நிதிஷ்குமார் குறியாக இருக்கிறார்" என்று கடுமையாகச் சாடினார்..
பிரசாந்த் கிஷோர்: பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பிரசாந்த் கிஷோரும் முன்பு ஜேடியு கட்சியில் இருந்தவர் தான். அங்கே அவருக்குத் தேசிய துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டு இருந்தது. இருப்பினும், கடந்த 2020இல் கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்ததாகக் கூறி பிரசாந்த் கிஷோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகு தேர்தல் அரசியலில் இருந்து விலகி இருந்த பிரசாந்த் கிஷோர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு 'ஜன் சுராஜ்' என்ற அமைப்பைத் தொடங்கி நடத்தி வந்தார்.
அந்த அமைப்பை அவர் வரும் அக்டோபர் 2-ம் தேதி அரசியல் கட்சியாக மாற்ற இருக்கிறார். இது தொடர்பாக நடந்த செய்தியாளர் சந்திப்பில் தான் அவர் இந்தக் கருத்துகளைக் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், "அடுத்த ஆண்டு நடக்கும் பீகார் சட்டசபைத் தேர்தலில் எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் 'ஜன் சுராஜ்' தனித்துப் போட்டியிடும்.
அரசியல் கட்சி: அந்தத் தேர்தலில் நிச்சயம் நாங்கள் வென்று ஆட்சியைப் பிடிப்போம்.. பீகார் மக்களுக்கு இத்தனை காலம் நிதிஷ், பாஜக மற்றும் ஆர்ஜேடி தவிர வேறு வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்த போதிலும், மக்களுக்கு நல்ல திட்டங்கள் எதுவும் வரவில்லை. இதனால் மக்கள் சோர்வடைந்துள்ளனர்.. அக்டோபர் 2ஆம் தேதி, ஜன் சுராஜ் அரசியல் கட்சியாக உருவெடுக்கும் நிகழ்வில் ஒரு கோடி பேர் கலந்து கொள்ள உள்ளனர். கட்சியின் தொடக்க விழாவுக்கு இத்தனை பேர் கலந்து கொள்வது இதுவே முதல்முறையாகும்.
பீகார் மாநிலத்தில் சாதிய ஆதரவு இல்லாமல் வெல்ல முடியாது எனச் சிலர் சொல்கிறார்கள். ஆனால், அதில் எனக்குப் பெரிதாக நம்பிக்கை இல்லை. கடந்த சில ஆண்டுகளாகவே இங்கே ஜான் சுராஜ் ஆதரவு பெற்ற வேட்பாளர்கள் தான் இடைத்தேர்தல்களில் வென்று வருகிறார்கள்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications