இது ஒரே நாடுதானே.. பிறகு ஏன் மாநிலம் விட்டு மாநிலம் செல்வோரை புலம்பெயர்ந்தவர் என்கிறீர்?- நிதிஷ்
பாட்னா: ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு செல்வோரை ஏன் புலம்பெயர்ந்தவர்கள் என்கிறீர்கள். இது ஒரே நாடுதானே என பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடு முழுவதும் லாக்டவுன் நீடிக்கப்பட்டுள்ளதால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பி வருகிறார்கள். இந்த நிலையில் இதுகுறித்து பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பஞ்சாயத்து உறுப்பினர்களுடன் வீடியோ மூலம் பேசினார்.
அவர் கூறுகையில் பீகார் திரும்பியவர்கள் உதவி கிடைக்கவில்லை என்பதால் வேறு மாநிலங்களுக்கு செல்ல வேண்டாம். அவர்களுக்கு சிறந்த வசதிகள் மற்றும் வாய்ப்புகள் கிடைக்கும். இதற்காக நாங்கள் 8,500 கோடி ரூபாய் செலவு செய்துள்ளோம்.

பீகார்
பீகாரில் இருந்து தொழில் நிமித்தமாக சென்ற தொழிலாளர்களை மற்ற மாநிலங்கள் கவனித்துக் கொள்ளவில்லை. அந்த தொழிலாளர்கள் அந்த மாநில வளர்ச்சிக்காக பணியாற்றுகிறார்கள் என்ற அலட்சியம்தான். மாநில அரசுகள் அவர்களை பாதுகாத்திருக்க வேண்டும்.

சரியல்ல
அந்தத் தொழிலாளர்களை புலம்பெயர்ந்தவர்கள் (பிரவேசி) என கூறுவது சரியல்ல. ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு சென்றவர்கள் எப்படி புலம்பெயர்ந்தவர்களாவர்? இது ஒரே நாடு, ஒரே தேசம்தானே. பிறகு ஏன் அவர்களை அப்படி அழைக்கிறீர்கள்?

பணிக்கு உத்தரவு
ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு சென்றால் மட்டுமே அவர்கள் புலம்பெயர்ந்தவர்கள். வேலையில்லாமல் திரும்பி வந்தோருக்காக கூடுதலாக வேலைவாய்ப்புகளை உருவாக்க பீகார் மாநில அரசு முயற்சித்து வருகிறது. இதுகுறித்து அனைத்து துறைகளும் பணியாற்றி வருகிறார்கள். அவர்களுக்கு 100 நாட்கள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணி வழங்க முடிவு செய்துள்ளோம்.
Recommended Video

வேறு மாநிலங்கள்
கடந்த மே 4ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை 30 லட்சம் தொழிலாளர்கள் பீகாருக்கு திரும்பி வந்துள்ளனர். ரூ 5,300 ஒவ்வொரு தனிமைப்படுத்தப்படுவோருக்கு செலவிடப்படுகிறது. மத்திய அரசும் ஜனதன வங்கிக் கணக்கில் பணம் போடுகிறது. இலவச சிலிண்டர்களை வழங்குகிறது. எனவே பீகார் வந்தவர்கள் பிழைப்புக்காக வேறு மாநிலங்களுக்கு செல்ல வேண்டாம் என்றார்.












Click it and Unblock the Notifications