பீகாரில் ஒரு “ஏக்நாத் ஷிண்டே”.. பாஜக திட்டம் முறியடிப்பு! சுதாரித்த நிதீஷ் - கழற்றிவிடப்பட்ட தாமரை
பாட்னா: மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏக்நாத் ஷிண்டே மூலம் சிவசேனாவில் கலகத்தை ஏற்படுத்தியதைபோல், பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளத்தில் நிதீஷ் குமாருடன் மோதல் போக்கை கடைபிடித்து வந்த பிரமுகர் ஒருவரை பாஜக தலைமை வளர்த்துவிட முயன்றதே தற்போதைய கூட்டணி பிளவுக்கு முக்கிய காரணம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
2017 ஆம் ஆண்டு ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணியை முறித்துக்கொண்டு பாஜக ஆதரவோடு ஆட்சியை தொடர்ந்த நிதீஷ் குமார், 2020 தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். அதில், ஐக்கிய ஜனதா தளம் கட்சி 45 இடங்களில் மட்டுமே வென்றது.
பாஜக 77 தொகுதிகளில் வெற்றிபெற்றது. மறுபக்கம் காங்கிரஸ் இடதுசாரிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட தேஜஸ்வி யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் 79 இடங்களில் வென்று அதிர்ச்சி கொடுத்தது. ஆனாலும் நிதீஷ் குமாரை முதலமைச்சராக்கி கூட்டணியில் அங்கம் வகித்தது பாஜக.

பாஜகவின் நடவடிக்கை
ஆனால், ஐக்கிய ஜனதா தளம் கட்சியைவிட அதிக இடங்களில் வென்றதால் பீகார் அரசில் அதிகாரத்தை கையில் எடுத்து தன்னிச்சையாக பாஜக செயல்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதன் காரணமாகவே நிதீஷ் குமார் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர்கள் பாஜக மீது கடும் அதிருப்தியில் இருந்து வந்தனர்.

பாஜக அதிருப்தி
இதனால், பீகார் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டபோது பாஜகவுக்கு 9ல் ஒரு இடத்தை மட்டுமே ஜேடியு வழங்கியது, ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டங்களை நிதீஷ் குமார் எதிர்த்து வருவது, பாஜகவுக்கு விருப்பமின்றி சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முயன்றது, மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக கருத்து தெரிவித்தது போன்ற விசயங்களால் பாஜக தலைமையும் நிதீஷ் குமார் மீது அதிருப்தியில் இருந்திருக்கிறது.

பீகாரின் ஏக்நாத் ஷிண்டே
இதனை தொடர்ந்து மகாராஷ்டிரா மாடலை கையில் எடுத்தது பாஜக. சிவசேனாவில் ஏக்நாத் ஷிண்டேவை உருவாக்கியதைபோல் பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளத்தில் ஆர்.சி.பி.சிங்கை வைத்து அக்கட்சியை உடைக்க முயன்றது. மத்திய அமைச்சரவையில் ஜேடியு அங்கம் வகிக்காது என நிதீஷ் தெரிவித்த நிலையில், அதை மீறி பீகாரில் ஐக்கிய ஜனதா தளத்தின் முக்கிய தலைவராக இருந்த ஆர்.சி.பி. சிங்கிற்கு கட்சித் தலைமையிடம் கருத்து கேட்காமல் மத்திய அமைச்சர் பதவி வழங்கியது பாஜக.
Recommended Video

நிதீஷ் குமார் வைத்த செக்
இது நிதீஷ் குமாருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. ஆர்.சி.பி. சிங் பாஜகவினருடன் தொடர்ந்து நெருக்கம் காட்டி வருவதை முன்கூட்டியே சுதாரித்த நிதீஷ் குமார், அவர் மத்திய அமைச்சராக தொடர முடியாத வகையில் அவருக்கு ராஜ்ய சபா உறுப்பினர் பதவி வழங்க நிதீஷ் மறுத்தார். இதனால் கடந்த ஜூலை மாதம் ஆர்.சி.பி. மத்திய உருக்குத்துறை அமைச்சர் பதவியிலிருந்து விலகினார்.

கட்சியிலிருந்து விலகல்
அதன் தொடர்ச்சியாக ஆர்.சி.பி. சிங் மீதான ஊழல் வழக்குகள் வேகமெடுக்கத் தொடங்கின. அவரது குடும்பத்தினர் பெயரில் சேர்ந்திருக்கும் சொத்துக்கள் தொடர்பாக விளக்கம் கேட்டு ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் நோட்டீஸ் அனுப்பியது. நிதீஷ் குமார் தன்னை குறிவைப்பதை உணர்ந்த ஆர்.சி.பி. சிங்கும் கட்சியிலிருந்து வெளியேறுவதாக சில நாட்களுக்கு முன் அறிவித்தார். தனி கட்சி உருவாக்குவது குறித்தும் அவர் பேசிய நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டத்தில் நிதீஷ் குமார் பங்கேற்க மறுத்த பின்னர் கூட்டணி மோதல் உச்சக்கட்டத்தை எட்டியது.

சாணக்கியர்
ஒரே மாதத்தில் பிரதமரின் 2 நிகழ்ச்சிகளை நிதீஷ் குமார் புறக்கணித்த நிலையில்தான் எம்.பி, எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை கூட்டி பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக நேற்று அறிவித்தார் நிதீஷ் குமார். தேஜஸ்வி யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமை கோரி இருக்கிறார். ஆபரேசன் தாமரை என்று கூறி மாநில கட்சிகளை வளைத்து ஆட்சியை பிடித்து வந்த பாஜகவை தனது அரசியல் சாணக்கியத்தால் வீழ்த்தி இருக்கிறார் நிதீஷ்.












Click it and Unblock the Notifications