11 வயது மாணவி கர்ப்பம்... பாட்னா பள்ளி முதல்வருக்கு மரண தண்டனை.. என்னத்த சொல்ல
பாட்னா: பள்ளி மாணவியை கற்பழித்து கர்ப்பமாக்கிய தலைமை ஆசிரியருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
வேலியே பயிரை மேய்ந்த துயரமான கதை இது. பீகாரை சேர்ந்த அரவிந்த் குமார் என்பவர் பாட்னாவில் நியூ சென்ட்ரல் பப்ளிக் பள்ளியை நிர்வகித்து வருகிறார். அதன் முதல்வரும் இவர் தான்.
இந்த நிலையில் கடந்த 2018ம் ஆண்டு, அந்த பள்ளிக்கு வந்த 11 வயது மாணவி ஒருவரை கட்டாயப்படுத்தி அரவிந்த் கற்பழித்து இருக்கிறார். இதற்கு ஆசிரியர் அபிஷேக் என்பவரும் உடந்தையாக இருந்து, அதனை வீடியோகாவும் எடுத்து வைத்து, பலமுறை அந்த சிறுமியுடன் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டதாக தெரிகிறது.
இதனால் அந்த சிறுமி கர்ப்பமடைய, மகளிர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க ஆரம்பித்தனர். 2018 செப்டம்பர் முதல் இந்த வழக்கு நடைபெற்று வந்தது.
நீதிமன்றத்தில் சாட்சியளித்த அந்த சிறுமி, முதல்வர் அரவிந்த் அடிக்கடி தன்னை தவறாகத் தொட முயன்றார். இதைப் பற்றி மற்றவரிடம் எதுவும் சொல்ல பயமாக இருந்தது. ஒரு நாள் பள்ளியில், அபிஷேக் என்ற மற்ற ஆசிரியரும் இருந்தபோது, முதல்வர் அவரது அறைக்கு அழைத்து பாலியல் பலாத்காரம் செய்தார் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
சிறுமியின் கர்ப்பம் அரசு மருத்துவமனையில் கலைக்கப்பட, அரவிந்த் குற்றவாளி என்பது கண்டுபிடிக்கப்பட்டது. மரபணு பரிசோதனை நடத்தி அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது.
அரிதினும் அரிதான இந்த வழக்கை விசாரித்த போஸ்கோ நீதிபதி ஆவதேஷ் குமார், முதல் குற்றவாளியான முதல்வர் அரவிந்திற்கு ரூ.1 லட்சம் அபராதமும், மரண தண்டனை விதிக்கப்படுவதாகவும் உத்தரவிட்டார்.
அரவிந்தின் குற்றத்திற்கு துணை புரிந்த அபிஷேக்குமாருக்கு ரூ.50 ஆயிரம் அபராதமும், ஆயுள் தண்டனையும் விதிக்கப்படுவதாக உத்தரவிட்டார்.
சிறுமிக்கு வன்கொடுமை நிதி உதவி திட்டத்தின் கீழ், எதிர்கால வாழ்வு நலன்கருதி ரூ.15 லட்சம் வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.