ஆட்சிக்கு வந்தால்.. பீகாரில் மீண்டும் சாராய கடைகள் திறக்கப்படும்! பிரசாந்த் கிஷோர் பேச்சால் சர்ச்சை
பாட்னா: தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில், பீகாரில் நான் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் சாராய கடைகள் திறக்கப்படும் என்று ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனரும், தேர்தல் வியூக வகுப்பாளருமான பிரசாந்த் கிஷோர் அறிவித்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த 2016ம் ஆண்டு பீகாரில் மதுவிலக்கை நிதிஷ் குமார் தலைமையிலான அரசு அமல்படுத்தியது. இந்நிலையில் பிரசாந்த் கிஷோரின் வாக்குறுதி கவனம் பெற்றிருக்கிறது. பாட்னாவில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது பிரசாந்த் கிஷோர் பேசுகையில்,

"தற்போது மதுவிலக்கால் ஏற்படும் சுமார் ₹28,000 கோடி இழப்பைத் தவிர்த்து, உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து ₹5-6 லட்சம் கோடி கடன்களைப் பெற முடியும். நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், ஒரு மணி நேரத்தில் மதுவிலக்கு ரத்து செய்யப்படுவது குறித்து உத்தரவு வெளியாகும். பீகாரில் உண்மையான மதுவிலக்கு இல்லை. மதுபானக் கடைகளை மூடிவிட்டு, பின்வாசல் வழியாக மது விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு சட்டத்தில் உள்ள ஓட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன" என்று கூறியிருக்கிறார்.
பிரசாந்த் கிஷோரின் அறிவிப்பை, தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளும் ஆதரிக்கின்றன. மத்திய அமைச்சரும் முன்னாள் பீகார் முதல்வருமான ஜிதன் ராம் மாஞ்சி, மதுவிலக்கு கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அரசுக்கு வலியுறுத்தியுள்ளார். இந்தக் கொள்கையை அமல்படுத்தும்போது, ஏழைகள் பாதிக்கப்படுகிறார்கள். அதேசமயம் பணக்கார கடத்தல்காரர்கள் தப்பிக்கிறார்கள். முந்தைய ஆய்வுகள் இந்தக் குறைபாடுகளை நிவர்த்தி செய்யத் தவறிவிட்டது.
எனவே மதுவிலக்குச் சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இதை நான் வலியுறுத்துவது இது 4வது முறை. ஏழை மக்கள், 250 மில்லி மது அருந்தியதற்காக பிடிபட்டால் கூட, வழக்குத் தொடரப்படுகிறார்கள், அதேசமயம் பெரிய அளவிலான கடத்தலில் ஈடுபட்டவர்கள் விடுவிக்கப்படுகிறார்கள்" என்று கூறியுள்ளார். இவரது மதச்சார்பற்ற ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கிறது.
இதில் கவனிக்கப்பட வேண்டிய மற்றொரு விஷயம் என்னவெனில், எதிர்க்கட்சியாக இருக்கும் ஆர்ஜேடியும் இந்த விவகாரத்தில் மென்மையான போக்கையே கடைபிடிக்கிறது என்பதுதான். அதாவது ஆர்ஜேடி எம்எல்ஏ பாய் வீரேந்திரா, "மதுவிலக்கு அமலாக்கம் சில கவலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. மதுவிலக்கு சட்டம் பணக்காரர்களால் கடுமையாக மீறப்படுகிறது. எனவே அவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
தி லான்செட் ரீஜினல் ஹெல்த்: சவுத் ஈஸ்ட் ஏசியா எனும் ஊடக இதழ், கடந்த 2024ம் ஆண்டு மே மாதம் மது விலக்கு குறித்து பீகார் ஆய்வு நடத்தி, அதை அறிக்கையாக வெளியிட்டிருந்தது. இந்த ஊடகம், பீகாரின் மதுவிலக்கின் தாக்கத்தை ஆய்வு செய்தது. தேசிய மற்றும் மாவட்ட அளவிலான சுகாதார மற்றும் வீட்டு கணக்கெடுப்பு தரவுகளைப் பயன்படுத்தியது.
மதுவிலக்குக்கு முன் அதிகரித்து வந்த ஆண்களின் மது பயன்பாடு, அண்டை மாநிலங்களுடன் ஒப்பிடும்போது அதன் போக்கை மாற்றியது. இந்தத் தடை, 2.1 மில்லியன் குடும்ப வன்முறை வழக்குகளைக் குறைக்கவும் உதவியது. இதில் பெண்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகமும் அடங்கும்.
பீகார் ஆண்களின் அதிக எடை மற்றும் உடல் பருமன் விகிதங்கள், மதுவிலக்கு இல்லாத மாநிலங்களில் உள்ள ஆண்களுடன் ஒப்பிடும்போது 5.6 சதவீத புள்ளிகள் குறைந்துள்ளதை இந்த ஆய்வு சுட்டிக்காட்டியது.
மதுவிலக்கலால் பொது சுகாதார நன்மைகள் இருந்தபோதிலும், பொருளாதாரத் தாக்கம் குறித்து நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். மதுவிலக்கு கள்ளச்சாராயத்தின் உற்பத்தி மற்றும் நுகர்வை அதிகரித்தது. இந்த சட்டவிரோத சந்தை, கலப்பட மதுவை உட்கொள்வது உள்ளிட்ட கடுமையான சுகாதார அபாயங்களை ஏற்படுத்தியது. இது பல மரணங்களுக்கு வழிவகுத்துள்ளது. அதேபோல மதுவிலக்கை கண்காணிக்கவும், அதை கட்டுப்படுத்தவும் போலீசார்கள் அதிக எண்ணிக்கையில் பயன்படுத்தப்படுகின்றனர். எனவே, மற்ற குற்றங்களை குறைப்பதில் தொய்வு ஏற்படுகிறது.
இந்த பின்னணியில்தான், பீகாரில் மீண்டும் சாராய கடைகள் திறக்கப்பட வேண்டும் என்று பிரசாந்த் கிஷோர் வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications