119 தொகுதிகளில் ஆர்ஜேடி கூட்டணி வெற்றி பட்டியல் ரிலீஸ்- தேர்தல் கமிஷன் மீது சரமாரி புகார்!
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் ஆர்ஜேடி-காங்கிரஸ்-இடதுசாரிகள் அணி 119 தொகுதிகளில் வெற்றி பெற்றதாக பட்டியலை அந்த அணி வெளியிட்டுள்ளது. மேலும் 8 தொகுதிகளின் தேர்தல் முடிவுகளை எதிர்த்து வழக்கு தொடரவும் ஆர்ஜேடி முடிவு செய்துள்ளது.
பீகாரில் காலை முதலே படுமந்தமான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வந்தது. ஆனால் மாலை முதல் அதுவும் கடந்த 1 மணிநேரத்தில் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் அதிரடியாக பல தொகுதிகளுக்கான முடிவுகள் விறுவிறுவென அப்டேட் செய்யப்பட்டு வருகிறது.
இது ஒருபுறம் இருக்க பீகாரில் 119 இடங்களில் தங்களது கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாக முழு பட்டியலையும் ஆர்ஜேடி-காங்கிரஸ்-இடதுசாரிகள் அணி வெளியிட்டிருக்கிறது. தேர்தல் ஆணையத்தின் இணையதள பக்கத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டவர்கள், வாக்கு எண்ணிக்கை மையங்களில் தோற்றவர்களாக அறிவிக்கப்பட்டிருக்கின்றனர் என்பது ஆர்ஜேடியின் குற்றச்சாட்டு.
இதேபோல் பாட்னாவில் முகாமிட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ரந்தீப்சிங் சுர்ஜிவாலாவும் தேர்தல் ஆணையம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சரமாரியாக அடுக்கி வருகிறார். மேலும் 8 தொகுதிகளின் தேர்தல் முடிவுகளை எதிர்த்து வழக்கு தொடரப் போவதாக ஆர்ஜேடி அறிவித்துள்ளது.
அதேபோல் 3 தொகுதிகளில் மறுவாக்குப் பதிவு நடத்த வேண்டும் என்று சிபிஐஎம்எல் கட்சி வலியுறுத்தியுள்ளது.