பீகார்: வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டவர்கள் யார்? குழப்பம் உள்ளது - உச்சநீதிமன்றம்
பாட்னா: பீகாரில் இந்திய தேர்தல் ஆணையம் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்தை மேற்கொண்டிருந்தது. ஆனால் இதில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், இறுதி வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டவர்கள் யார் என்பதில் குழப்பம் நிலவுவதாக நீதிமன்றம் கூறியிருக்கிறது. மட்டுமல்லாது வழக்கு விசாரணையை அக்.9ம் தேதிக்கு ஒத்தி வைத்திருக்கிறது.
ஏற்கெனவே இருக்கும் வாக்காளர் பட்டியலை கணக்கில் கொள்ளாமல், புதியதாக வாக்காளர் பட்டியலை உருவாக்குவதுதான், வாக்காளர் சிறப்பு பட்டியல் திருத்தமாகும்(SIR). ஆனால் இதில் பல லட்சம் வாக்களார்கள் விடுபட்டிருப்பதாகவும், புதிய வாக்காளர் பட்டியலை உருவாக்கும்போது வேண்டுமென்றே சிறுபான்மையின வாக்காளர்கள் சேர்க்கப்படாமல் தவிர்க்கப்பட்டிருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR) போன்ற தொண்டு நிறுவனங்கள், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்களில், SIR செயல்முறையின் சட்டப்பூர்வத்தன்மை மற்றும் வெளிப்படைத்தன்மை குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. ADR சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், இறுதிப் பட்டியல் வெளியிடுவதற்கு முன்பே வழக்கை விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தை வலியுறுத்தினார். வாக்காளர்களின் உரிமைகள் மீறப்படலாம் என்றும் நடைமுறைச் சிக்கல்கள் இருக்கலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். எனினும், இறுதிப் பட்டியல் வெளியான பிறகும் நீதிமன்ற மறுபரிசீலனைக்கு தடை இல்லை என்று நீதிபதிகள் அமர்வு தெளிவுபடுத்தியது.
இதனையடுத்து இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதில் 14 லட்சம் புதிய வாக்காளர்கள் உட்பட மொத்தம் 7.43 கோடி வாக்காளர்கள் இடம் பெற்றிருக்கின்றனர். தற்போது பீகார் தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் பீகார் சட்டமன்றத் தேர்தல்கள் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14 அன்று நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் SIR செயல்முறையின் சட்டப்பூர்வத்தன்மை மற்றும் வெளிப்படைத்தன்மை குறித்து இன்று இறுதி வாதங்களை உச்சநீதிமன்றம் கேட்டது. நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதி ஜோய்மால்யா பாக்ஜி ஆகியோர் அடங்கிய அமர்வு, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 3.66 லட்சம் வாக்காளர்களின் பெயர்களையும், சேர்க்கப்பட்ட 21 லட்சம் வாக்காளர்களின் பெயர்களையும் வெளியிட வேண்டும் என்ற மனுதாரர்களின் கோரிக்கைக்கு பதிலளித்தது. தேவையான தகவல்களைப் பெற்று வருமாறு தேர்தல் ஆணையத்திடம் கேட்டுக் கொண்டு, விசாரணையை அடுத்த வியாழக்கிழமை (அக்டோபர் 9) வரை ஒத்திவைத்தது.
இந்த வழக்கில் பிறப்பிக்கப்படும் உத்தரவு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். ஏனெனில், பீகாரில் நடைபெறும் தேர்தல், இனி நாடு முழுவதும் நடக்கும் அனைத்து தேர்தல்களுக்கும் தாயாக இருக்கும் என்று தலைமை தேர்தல் ஆணையர் கூறியிருக்கிறார். மட்டுமல்லாது தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலங்களிலும் SIR நடவடிக்கைக்கு தயாராக இருக்க வேண்டும் என மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார்.
கேரளாவில் SIR நடவடிக்கைக்கு எதிராக அம்மாநில சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. தமிழகத்திலும் இதற்கு எதிர்ப்புகள் இருக்கின்றன. எனவே இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தாக இருக்கும் என சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications