வட மாநிலத்தவர் விவகாரம்.. இங்கே வந்த பீகார் டீம்! அங்கே திடீரென பீகார் முதல்வரை சந்தித்த டிஆர் பாலு
திமுக மூத்த தலைவர் டி.ஆர்.பாலு பீகார் முதல்வரைச் சந்தித்தார்.
பாட்னா: பீகார் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் விவகாரம் குறித்து பீகார் குழு தமிழ்நாடு வந்துள்ள நிலையில், திமுக மூத்த தலைவர் டி.ஆர்.பாலு எம்பி பீகாரில் முதல்வர் நிதிஷ்குமாரை சந்தித்துப் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் பாதுகாப்பாக இருப்பதாக உறுதியளித்தார்.
வட மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்து வேலை செய்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஊதியம், வேலை நிச்சயம் கிடைக்கும் உள்ளிட்ட காரணங்களால் அவர்கள் இங்கு வருகிறார்கள்.
இங்கு வட மாநில தொழிலாளர்கள் எந்தவொரு பிரச்சினைகளையும் சந்திப்பதில்லை. கொரோனா காலத்தில் சென்றவர்களும் கூட இப்போது மீண்டும் உறவினர்களுடன் கூடுதலாகவே இங்குத் திரும்பி வருகின்றனர்.

வட மாநிலத்தவர் விவகாரம்
தமிழ்நாட்டிலும் கூட கட்டிட வேலை, ஹோட்டல் வேலைகளுக்கு ஆட்கள் தேவைப்படுகிறார்கள். இதுபோன்ற வேலைகளில் தமிழக இளைஞர்கள் ஆர்வம் காட்டுவதில்லை என்று சொல்லப்படுகிறது. இதன் கரணமாகவே இதுபோன்ற வேலைகளுக்கு வட மாநில இளைஞர்களை பணியமர்த்தப்படுகிறார்கள் என்று வணிகர்களும் கூறி வருகின்றனர். வட மாநிலங்களில் இருந்து இங்கே வந்து தங்கியிருக்கும் இளைஞர்கள் எவ்வித பிரச்சினையும் இல்லாமலேயே வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு எதிராக நடக்கும் சம்பவங்களிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

போலி வீடியோ
இந்தச் சூழலில் சில நாட்களாகத் திட்டமிட்டு சிலர் இணையத்தில் பொய்யான தகவல்களைப் பரப்பினர். பழைய சம்பவங்களையும் வேறு இடங்களில் நடந்தவற்றையும் ஏதோ தமிழ்நாட்டில் இப்போது நடந்த சம்பவங்கள் என்பது போலப் பொய்யான தகவல்களைப் பரப்பினர். அதிலும் குறிப்பாக இந்தி பேசியதாலேயே வட மாநிலத்தவர் தமிழ்நாட்டில் கொல்லப்பட்டதாகத் திட்டமிட்டு பொய்களைப் பரப்பினர். இந்த விவகாரத்தில் இரு மாநில அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தனர். பொய்களைப் பரப்பியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், வீடியோக்களை நீக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

டிஆர் பாலு- நிதிஷ்குமார் சந்திப்பு
இதில் தொடர்புடையவர்களைக் கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே பீகார் அதிகாரிகள் குழுவினரும் தமிழ்நாடு வந்து இங்கிருக்கும் வட மாநிலத்தவர்களைச் சந்தித்துப் பேசினர். இதற்கிடையே திமுக மூத்த தலைவர் டி.ஆர்.பாலு எம்பி பீகாரில் முதல்வர் நிதிஷ்குமாரை சந்தித்துப் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் பாதுகாப்பாக இருப்பதாக உறுதியளித்தார். டிஆர் பாலுவை நிதிஷ்குமார் சால்வை அணிவித்து வரவேற்றார்.

முதல்வர் ஸ்டாலின் கடிதம்
பீகார் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களைப் பாதுகாக்க திமுக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தையும் நிதிஷ்குமாரிடம் டிஆர் பாலு வழங்கினார். இதையடுத்து அவர் ஆர்ஜேடி தலைவரும், துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் இல்லத்துக்குச் சென்றார். இருப்பினும் லாலு பிரசாத் யாதவிடம் இன்று சிபிஐ திடீரெ விசாரணை நடத்தியதைத் தொடர்ந்து, தேஜஸ்வி யாதவ் டெல்லி சென்றிருந்ததால் அவரைச் சந்திக்க முடியவில்லை.












Click it and Unblock the Notifications