பீகார் டுவிஸ்ட்.. கிங் மேக்கராக மாறும் சிராக் பாஸ்வான்? பாஜகவுடன் கூட்டணி வைத்து ஆட்சியை பிடிப்பாரா?
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில், செம திருப்பங்கள் காத்திருப்பதாக முதல் கட்ட வாக்கு எண்ணிக்கை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
பீகார் சட்டசபை தேர்தலில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் ஒரு அணியாகவும், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ்-இடதுசாரிகள் இன்னொரு அணியாகவும் களம் கண்டனர். பாஜக கூட்டணியில் இருந்து வந்த மறைந்த ராம்விலாஸ் பாஸ்வான் கட்சியான லோக் ஜனசக்தி தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது.
பாஸ்வான் மகன் சிராக் பாஸ்வான் தற்போது அந்த கட்சிக்கு தலைமை தாங்கி கொண்டிருக்கிறார். 137 தொகுதிகளில் தனது கட்சி தனித்து போட்டியிடும் என்று அவர் அறிவித்தார். தேர்தல் பிரச்சாரத்தின் போது நிதீஷ் குமாரை குறிவைத்து பிரச்சாரங்கள் செய்தாரே தவிர பாஜகவை விமர்சிக்கவில்லை. மத்தியில் பாஜக கூட்டணியில் அவர் தொடர்ந்து இருந்து வருகிறார்.

நிதிஷ் குமார் நிலைமை
ஒருவேளை யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் சிராக் பாஸ்வான் கட்சி, பாஜகவுடன் கூட்டணி அமைத்துக்கொண்டு நிதிஷ் குமாரை கழட்டி விட்டு விடும் என்று சில அரசியல் பார்வையாளர்கள் கூறினர். இப்போது கிட்டத்தட்ட நிலைமை அப்படித்தான் இருக்கிறது. காலை 10 மணி நிலவரப்படி ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைமையிலான மகாகத்பந்தன் கூட்டணி 110 இடங்களிலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 105 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன.

கிங் மேக்கர் சிராக் பாஸ்வான்
அதிலும் ஐக்கிய ஜனதாதளம் வெறும் 44 இடங்களிலும் பாஜக 60க்கும் மேற்பட்ட இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது. சிராக் பாஸ்வான் கட்சி 9 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இந்த கணக்குப்படி பார்த்தால் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும், அல்லது 70 தொகுதிகளுக்கும் மேல் லீடிங்கில் உள்ள ராஷ்ட்ரீய ஜனதாதளம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும். எந்த கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போகலாம். அப்போது கூட்டணிக் கணக்குகள் மாறக்கூடும். சிராக் பாஜகவுடன் கை கோர்ப்பார் அல்லது ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி உடன் கைகோர்ப்பார்.

தனித்துவிடப்படும் நிதிஷ்
ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியுடன் கைகோர்த்தால் கூட்டணியில் மாற்றங்கள் இருக்காது. ஒருவேளை பாஜக உடன் அவர் கை கோர்த்தால், நிதிஷ் குமாரை கூட்டணியிலிருந்து கழற்றிவிட வேண்டும் என்பது முக்கிய கோரிக்கையாக இருக்கும். அப்போது எந்தப் பக்கமும் போக முடியாமல் நிதிஷ்குமார் அரசியல் வாழ்க்கை அஸ்தமனமாகும்.

நிலைமை இதுதான்
பாஜக-சிராஜ் பாஸ்வான் கட்சியுடன் இணைந்து கூட்டணி அமைக்க கூடும். ஆனால் இப்போது மொத்தம் 30 சுற்றுகளில் மூன்று சுற்றுகள் மட்டுமே வாக்கு எண்ணிக்கை நடைபெற்று உள்ளது. எனவே உடனடியாக ஒரு முடிவுக்கு வர முடியாது என்றாலும் இப்போது உள்ள நிலவரம் இதுதான். சிராக் பாஸ்வான் கிங் மேக்கராக உருவாக்கி உள்ளார் என்பது தான் தற்போதைய யதார்த்தம்.












Click it and Unblock the Notifications