கலெக்டர் ஆபீஸை அலற விட்ட அடிதடி சம்பவம்.. ஏலத்திற்கு வந்த மற்ற கட்சியினரை தாக்கிய 12 பேர் கைது!
பெரம்பலூர்: பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் கல்குவாரி ஏலத்தின் போது வன்முறையில் ஈடுபட்ட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் கல் குவாரிகளுக்கு நடைபெற இருந்த ஏலத்திற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்பந்தப்புள்ளி கொடுக்க வந்த பெரம்பலூர் கவுல்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவரும் தமிழக பாஜக தொழில்துறை பிரிவு மாவட்டத் துணைத் தலைவருமான கலைச்செல்வன் மற்றும் தொழில்துறை பிரிவு மாவட்டத் தலைவரான முருகேசன் ஆகியோரை, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் திமுகவினர் தடுத்து தாக்கியுள்ளனர்.

மேலும், திமுகவினரைத் தடுக்க முயற்சித்த, கனிம வளத்துறை துணை இயக்குனர் ஜெயபால் மற்றும் உதவி புவியியலாளர் இளங்கோவன், வருவாய் ஆய்வாளர் குமரிஆனந்தன் ஆகிய அரசு அதிகாரிகளையும், பாதுகாப்பு பணியிலிருந்த டிஎஸ்பி பழனிச்சாமி உள்ளிட்ட காவல்துறையினர் மீதும் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, ஏலத்தை ஒத்தி வைத்தார் மாவட்ட ஆட்சியர் கற்பகம்.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, வன்முறையில் ஈடுபட்ட திமுகவினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அராஜகத்தில் ஈடுபட்டு வருபவர்களைக் கட்டுப்படுத்தத் தவறிய திமுகவுக்கு, வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

இந்நிலையில் பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் கல்குவாரி ஏலத்தின் போது வன்முறையில் ஈடுபட்ட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏலத்தில் மற்றவர்கள் பங்கேற்காமல் தடுத்து தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்த சூழலில், அமைச்சர் சிவசங்கரின் உதவியாளர் மகேந்திரன், திமுக எம்.எல்.ஏவின் உதவியாளர் சிவசங்கர் உள்ளிட்டோர் மீது 7 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், 12 பேரை கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications