ஆசிரியர் வைத்த பொறியில் அப்பட்டமாக சிக்கிய அரசு ஊழியர்கள்.. பெரம்பலூர் கலெக்டர் ஆபிஸில் பரபரப்பு
பெரம்பலூர்: கடந்த ஜூலை மாதம் 31-ந் தேதி ஓய்வு பெற்ற ஆசிரியருக்கு பணி நீட்டிப்பு வழங்குவதற்கு ரூ.40 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஆதிதிராவிடர் நல அலுவலக உதவியாளர், இளநிலை உதவியாளர் ஆகியோரை பெரம்பலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் பொறிவைத்து பிடித்து கைது செய்தனர். ரசாயன பவுடர் தடவிய நோட்டுகளை இருவரும் வாங்கிய உடன் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் தைரியமாக லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளிக்க முன்வர வேண்டும். ஒவ்வொருவரும் லஞ்சம் கொடுத்து காரியத்தை சாதித்துக் கொள்ளாமல், புகார் அளிப்பதன் மூலம் லஞ்சம் கேட்டால் மாட்டிக் கொள்வோம் என்று பயந்து பலர் லஞ்சம் வாங்குவதையே விட்டுவிடுவார்கள். அண்மைக் காலமாக அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்டால் பொதுமக்கள், லஞ்சம் கொடுக்காமல் புகார் அளிப்பது அதிகரித்துள்ளது.

அதன் காரணமாக தினமும் ஒரு அரசு ஊழியர் எங்காவது லஞ்சம் வாங்கிய புகாரில் கைதாகி வருகிறார்கள். லஞ்ச ஒழிப்பு போலீசாரின் கைது நடவடிக்கையை சந்திக்கும் அரசு ஊழியர் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்படுவார். அவர் ஜாமினில் வெளியே வந்தாலும், சஸ்பெண்ட் முடிந்த பிறகே பணியில் சேர முடியும். அப்படி பணியில் சேர்ந்தாலும், லஞ்சம் வாங்கிய வழக்கை நீதிமன்றத்தில் எதிர் கொள்ள வேண்டும்.
இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் 31-ந் தேதி ஓய்வு பெற்ற ஆசிரியருக்கு பணி நீட்டிப்பு வழங்குவதற்கு ரூ.40 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஆதிதிராவிடர் நல அலுவலக உதவியாளர், இளநிலை உதவியாளர் ஆகியோர் பெரம்பலூரில் கைதாகி உள்ளனர். பெரம்பலூர் மாவட்டம், லாடபுரத்தை சேர்ந்த 60 வயதாகும் பாலசுப்பிரமணியன் , வேப்பந்தட்டை தாலுகா, பசும்பலூரில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.. கடந்த ஜூலை மாதம் 31-ந் தேதி அன்று ஓய்வு பெற்றார்.
இந்நிலையில் அவர் தனக்கு நடப்பு கல்வி ஆண்டு வருகிற மே மாதம் 31-ந்தேதி வரை பணி நீட்டிப்பு வழங்கக்கோரி, அதற்காக சான்று பெற பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் தரைத்தளத்தில் பின்பகுதியில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் ஆசிரியர் பாலசுப்பிரமணியன் விண்ணப்பித்துள்ளார் . அதற்கு அந்த அலுவலகத்தில் பணிபுரியும் உதவியாளர் சிவபாலன் (45), இளநிலை உதவியாளர் ரமேஷ் (40) ஆகியோர் பாலசுப்பிரமணியனிடம் ரூ.40 ஆயிரம் லஞ்சமாக கேட்டார்களாம். லஞ்சம் கொடுக்க விரும்பாத பாலசுப்பிரமணியன் இதுகுறித்து பெரம்பலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசில் புகார் அளித்தார்.
இதையடுத்து ரசாயன பவுடர் தடவிய ரூ.40 ஆயிரத்தை சிவபாலன், ரமேசிடம் கொடுக்க பாலசுப்பிரமணியனிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழங்க அறிவுறுத்தினர். அதன்படி பாலசுப்பிரமணியன் நேற்று மாலை பெரம்பலூர் மாவட்ட ஆதிதிராவிடர்-பழங்குடியினர் நல அலுவலகத்திற்கு சென்றார். அங்கு பெரம்பலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் அலுவலகத்தின் அருகே ரகசியமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டார்கள்.
இதனிடையே பாலசுப்பிரமணியன் லஞ்ச பணத்தை சிவபாலன், ரமேஷ் ஆகியோரிடம் கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் விரைந்து சென்று சிவபாலன், ரமேஷ் ஆகியோரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தார்கள். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications