தேதி குறித்த எடப்பாடி! திமுக அராஜகத்தை எதிர்த்து கூடுவோம்: பெரம்பலூரில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்
பெரம்பலூர்: பெரம்பலூரில் வரும் நவம்பர் 8ஆம் தேதி திமுக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் திமுக அரசு பதவியேற்ற நாள் முதல் விலைவாசி உயர்வு, கொலை, கொள்ளை, வழிப்பறி, போதைப் பொருட்கள் புழக்கம், சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள் என பல்வேறு சம்பவங்களால், மக்கள் தங்களின் அன்றாட வாழ்க்கையை நடத்த முடியாத அளவிற்கு பல்வேறு வகைகளில் சிரமப்பட்டு வருகின்றனர். இது போதாதென்று, ஆங்காங்கே திமுகவினர் பல்வேறு அராஜகச் செயல்களில் ஈடுபட்டு வருவது மிகுந்த வேதனைக்குரிய விஷயமாகும்.

தி.மு.கவினரின் பல்வேறு மக்கள் விரோதச் செயல்களை கண்டும் காணாமல் இருந்து வரும் தி.மு.க அரசைக் கண்டித்தும், அ.இ.அ.தி.மு.க. பெரம்பலூர் மாவட்டத்தின் சார்பில், வருகிற 8ஆம் தேதி (புதன்கிழமை) காலை 10 மணியளவில், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், பொதுமக்கள் பெருந்திரளான அளவில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கல் குவாரி டெண்டருக்கு விண்ணப்பிக்க வந்த பாஜகவினரை தடுத்து தாக்கியதோடு, போலீசாரையும், அதிகாரிகளையும் திமுகவினர் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அதனைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டிருந்தார் எடப்பாடி பழனிசாமி.
சென்னையில் ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய நபர் குறித்து வீடியோ வெளியிட்டு பேட்டி கொடுத்த காவல்துறை உயர் அதிகாரியும், பொம்மை முதல்வர் ஸ்டாலினும், பெரம்பலூரில் ஆளுங்கட்சியினர் நடத்திய வன்முறை வெறியாட்டம் குறித்து வீடியோ வெளியிடத் தயாரா? பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்'' என்பதை நிரூபிக்கும் வகையில், இந்த திராவக மாடல் ஆட்சியாளர்களின் கரங்களில் இன்றைக்கு தமிழகம் சிக்கி, மக்கள் அவதியுறுவது கொடுமையிலும் கொடுமை என விமர்சித்திருந்தார் எடப்பாடி பழனிசாமி.












Click it and Unblock the Notifications