பிறப்பு சான்றிதழ்.. 124 பிறப்பு சான்றிதழ்களால் பெரம்பலூர் விஏஓ ஆபீஸே ஆடிப்போச்ச.. யாருங்க இந்த சார்?
பெரம்பலூர்: பிறப்பு சான்றிதழை ஒரே ஆவணமாக பயன்படுத்தி கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், பிறப்பு சான்றிதழ்களுக்கான முக்கியத்துவங்கள் பெருகி வருகின்றன.. இப்படிப்பட்ட சூழலில், பெரம்பலூரில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
பிறப்பு சான்றிதழ்கள் ஒருவரின் அடையாளத்துக்குரிய முக்கிய ஆவணமாகும்.. குழந்தைகளை பள்ளியில் சேர்க்கவும், வாக்காளர் அடையாள அட்டையில் பெயர் சேர்க்கவும், மத்திய, மாநில அரசுப் பணிகளில் சேருவதற்கும், திருமணத்தை பதிவு செய்வதற்கும், டிரைவிங் லைசென்ஸ், பாஸ்போர்ட் போன்றவற்றை பெறுவதற்கும் பிறப்பு சான்றிதழ் அவசியமாகிறது.

அதனால்தான், பிறப்பு சான்றிதழ் பெறுவதை, எளிமைப்படுத்தி உள்ளது மத்திய அரசு.. இந்த பிறப்பு சான்றிதழை, குழந்தைகளுக்கு அந்தந்த மருத்துவமனை நிர்வாகமே பதிவு செய்து தந்துவிடும். குழந்தையின் பெயரை கூறி, தேவையான ஆவணங்களை பிறப்பு பதிவாளரிடம் வழங்கி சேர்த்து கொள்ளலாம்.
ஒரே அடையாள ஆவணம்
பிறப்பு சான்றிதழை அடையாள ஆவணமாக பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. வாக்காளர் அடையாள அட்டை, டிரைவிங் லைசென்ஸ், கல்வி வளாகத்தில் சேருவதற்கு, வாக்காளர் பட்டியல் தயாரித்தல், திருமண பதிவு, அரசுப்பணிகளில் இணைவதற்கு என அனைத்திற்கும் இனி ஒரே அடையாள ஆவணமாக பிறப்பு சான்றிதழை பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததால்தான், ஆதார் அட்டையை போலவே, பிறப்பு சான்றிதழ்களிலும் மோசடிகள் அரங்கேற துவங்கியிருக்கின்றன.. இதோ பெரம்பலுாரில், 124 பேருக்கு போலியாக பிறப்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது..
பிறக்காத குழந்தைகளுக்கு போலி சான்று பெரம்பலூர் மாவட்டம், கிருஷ்ணாபுரம் வட்டார தலைமை அரசு மருத்துவமனையின் பிறப்பு சான்றிதழ் வழங்கும் பிரிவின், பாஸ்வேர்டை பயன்படுத்தி, இங்கு பிறக்காத குழந்தைகளுக்கு, போலியாக பிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டு வந்தது தெரியவந்தது.
இதுகுறித்து, கிருஷ்ணாபுரம் சுகாதார ஆய்வாளர் வெங்கடேஷ், பெரம்பலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் தந்திருந்தார்.. இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.. அப்போதுதான், தஞ்சாவூர் மாவட்டம், சோழபுரம் கிராமத்தை சேர்ந்த முகமது பரித் என்ற 39 வயது நபர், பலரிடமும் ஆயிரக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு போலி பிறப்பு சான்றிதழ் வழங்கியது தெரியவந்தது.
முகமது பரித் சோழவரம் விஏஓ ஆபீசில் தினக்கூலி ஊழியராக வேலை பார்த்தாராம்.. இவரிடம், குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கும் தம்பதியர், தங்கள் பெயரை பெற்றோராக கொண்டு, இவர் வாயிலாக பிறப்பு சான்றிதழை பெற்றிருக்கிறார்கள்.
சிக்கும் முக்கிய நபர்கள்
இதற்கு பிறகு, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்த, 124 பேருக்கும் போலி பிறப்பு சான்றிதழ் வழங்கியிருக்கிறார் முகமது பரித்.. இதையடுத்து தற்போது முகமது பரித்தை போலீசார் கைது செய்து, ஜெயிலில் அடைத்தனர்.
அதுமட்டுமல்லாமல், போலி சான்றிதழ் பெற்றவர்கள், இதற்கென இருக்கும் புரோக்கர்கள் என கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்டோரிடம் போலீசார் விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.. இந்த மோசடிக்கு பெரம்பலுார் மாவட்ட சுகாதார துறையில் பணியாற்றும் சில அலுவலர்கள் உடந்தையாக செயல்பட்டதாகவும் தெரிகிறது.. எனவே, அது குறித்தும் விசாரணை நடக்கிறது. அந்தவகையில், பல முக்கிய அலுவலகர்கள் இதில் சிக்குவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications