ஜெயலலிதா போட்டோவ அகற்ற போறீயா? அசிங்கமாயில்லையாப்பா? துளைத்த தாய்! குன்னம் ராமச்சந்திரன் கண்ணீர்
பெரம்பலூர்: திமுகவில் இணைவதாக நேற்று கூறிவிட்டு இன்று பொது வாழ்வில் இருந்து விலகுகிறேன் என முன்னாள் எம்எல்ஏ குன்னம் ராமசந்திரன் கூறியதன் பின்னணியில் நடந்தது என்ன என்பதை பார்க்கலாம். அவர் திடீரென இப்படி ஒரு அதிர்ச்சிகரமான முடிவை எடுத்தது ஏன் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
இதுகுறித்து பெரம்பலூரில் தனது வீட்டில் குன்னம் ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியிருப்பதாவது: நான் திமுகவில் இணைவது குறித்து முன்னாள் அமைச்சர் ஆர்.வைத்திலிங்கத்திடம் நேற்று பேசினேன்.

அப்போது என் வீட்டில் குடும்ப உறுப்பினர்களும் இருந்தனர். நான் பேசிக் கொண்டிருந்த போது அமைதியாக இருந்தார்கள். நான் பேசி முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த போது என் குடும்ப உறுப்பினர் எதிர்ப்பை தெரிவித்தனர்.
திமுகவில் இணையும் என்ற எனது முடிவுக்கு ஒட்டுமொத்த குடும்பமும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது அவர்கள் சொன்னதில் இரு விஷயங்கள் என் மனதை மிகவும் வாட்டியது.
என்னை பெற்றெடுத்த தாய், "ஜெயலலிதாவின் புகைப்படத்தை அலுவலகத்தில் இருந்து அகற்ற போகிறாயா" (திமுகவில் இணைந்தால் ஸ்டாலின் படத்தைதானே வைக்க வேண்டும்) என கேட்டார் (சொல்லும் போதே ராமச்சந்திரன் உடைந்து அழுதார்).
இப்படி கட்சி மாறுவது எனக்கு அசிங்கமாக இருக்கிறது, இதெல்லாம் ஒரு வேலையாப்பா என என் மகள் கேட்டதும் எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது. இதனால் இரவு முழுக்க என்னால் உறங்க முடியவில்லை.
இதனால் என் குடும்ப உறுப்பினர்களின் எதிர்ப்பும் அதனால் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாகவும் என் உடல்நல பாதிப்பு காரணமாகவும் நான் இன்று மாற்று முடிவை எடுத்திருக்கிறேன்.
நான் பொதுவாழ்க்கையில் இருந்து விலகிக் கொள்வது என்ற முடிவை எடுத்திருக்கிறேன். நேற்று ஒரு பேச்சு, இன்று மாற்றி ஒரு பேச்சு என்பது தவறான விஷயம் என்ற போதிலும் குடும்ப நிம்மதிக்காக திமுகவில் இணையும் முடிவை கைவிடுகிறேன்.
இனி எந்த அரசியல் கட்சியிலும் பயணிக்க போவதில்லை. தயவு செய்து வைத்திலிங்கமும் என்னுடன் பயணித்த கழகத் தொண்டர்களும் என்னை மன்னித்து விடுங்கள். என்னுடன் உறுதுணையாக இருந்த கழகத் தொண்டர்கள் அவரவர் விரும்பும் கழகத்தில் இணைந்து பணியாற்றும்படி அன்போடு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வருகிறது. அரசியல் களத்தில் அதிரடியான முடிவுகள் எல்லாம் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஓபிஎஸ்ஸின் தீவிர ஆதரவாளராக இருந்த வைத்திலிங்கம், அதிமுகதான் எல்லாமே என சொல்லிவிட்டு திடீரென அண்ணா அறிவாலயம் பக்கம் சென்றுவிட்டார்.
அது போல் எடப்பாடி பழனிசாமி துரோகி அவரை எல்லாம் முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது என கூறி கடந்த ஆண்டு என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறிய டிடிவி தினகரன், நேற்று திடீரென பியூஷ் கோயலை சந்தித்தார். என்டிஏ கூட்டணியில் பயணிக்க போவதாக அறிவித்தார். இது பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் வைத்திலிங்கத்தை போல் குன்னம் ராமச்சந்திரனும் திமுகவில் இணைய போவதாக கூறியிருந்தார். ஆனால் இன்று குடும்பத்தினர் எதிர்ப்பு காரணமாக நான் அரசியலை விட்டே விலகுகிறேன் என கூறிவிட்டார். அடுத்து வெல்லமண்டி நடராஜன் என்ன செய்வாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications