நீ இப்பத்தான்டா பிரண்டு.. நாங்க சின்ன வயசுல இருந்தே நண்பர்கள்.. புதுவை கொலையில் திகில் தகவல்
புதுச்சேரி: நண்பர்களை கொலை செய்ய வற்புறுத்தியதால் தீர்த்து கட்டினோம் என்று புதுச்சேரியில் புதுமாப்பிள்ளை கொலை வழக்கில் கைதான கொலையாளிகள் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.
புதுச்சேரி கொசப்பாளையம் கருணாகரப்பிள்ளை வீதி பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன் பாலாஜி (31). இவர் எலக்ட்ரிக் வேலை மற்றும் வட்டிக்கு விடும் தொழில் செய்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் ஆனந்த பாலாஜிக்கு திருமணம் நடந்துள்ளது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆனந்த பாலாஜியை எல்லைபிள்ளைச்சாவடி வெங்கடேஸ்வரா நகரில் உள்ள ஒரு டீக்கடையில் வைத்து 4 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றது. ரத்தவெள்ளத்தில் கிடந்த ஆனந்த பாலாஜியை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி அவர் இறந்துபோனார்.
அபார்ஷன் ஆனந்தி இன்னும் அடங்கலை.. ஜாமீனில் வெளிவந்தும் கைவரிசை.. வளைத்து பிடித்த போலீஸ்
வசூல் நண்பர்கள்
இதுகுறித்து ஆனந்த பாலாஜியின் அப்பா சுப்பிரமணியன் ரெட்டியார்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விக்கி, சிவசங்கரன் மற்றும் சிலர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். முதற்கட்ட விசாரணையில் ஆனந்த பாலாஜி வட்டிக்கு விடும் தொழில் செய்து வந்ததால், அவர் வட்டிக்கு விடும் இடத்திலெல்லாம் இவரது நண்பர்கள் பணத்தை வசூல் செய்து கொடுப்பது வழக்கம். அவர்களுக்கு அவ்வப்போது ஆனந்த பாலாஜி பணமும், சில சமயங்களில் மதுவும் வாங்கி கொடுத்து வந்துள்ளார்.
பணம் கேட்டு மிரட்டல்
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆனந்த பாலாஜியை அவரது நண்பர்களான ரெட்டியார் பாளையத்தை சேர்ந்த அருள், கொசப்பாளையம் சிலம்பு (எ) மணிகண்டன், திலாஸ்பேட்டை மாந்தோப்பு கிஷோர் ஆகியோர் பணம் கேட்டு மிட்டியுள்ளனர். அதற்கு அவர் என்னிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளார். மேலும் ஆயுத பூஜை அன்று அவர்கள் 3 பேரும் ஆனந்த பாலாஜியிடம் பணம் கேட்டு மிரட்டி விரட்டி உள்ளனர். அப்போது அவர் வீட்டுக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டார்.
இதுதான் காரணமா
இதையடுத்து ஆனந்த பாலாஜியின் அப்பா சுப்பிரமணியன் உருளையன்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரும் கைது செய்யப்பட்டு காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதனால் ஜெயிலில் இருக்கும் அவர்களின் தூண்டுதலின் பேரில் கொலை நடந்ததா என்ற கோணத்தில் ரெட்டியார்பாளையம் குற்ற பிரிவு போலீசாரும், குற்றப்பிரிவு போலீசாரும் குற்றவாளிகளை தேடி வந்தனர்.
3 பேர் சிக்கினர்
இந்த நிலையில் ஆனந்த பாலாஜியை கொலைசெய்த அவரது நண்பர்களான விக்கி, சிவசங்கரன், விக்னேஸ்வரன், ஸ்டீபன், மதன் ஆகியோரை குற்றப்பிரிவு போலீசார் பிடித்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணையில் அவர்கள் பரபரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளனர். ஆனந்த பாலாஜியும் ஜெயிலில் இருக்கும் அருள், சிலம்பு(எ)மணிகண்டன், கிஷோர் மற்றும் நாங்களும் எல்லாம் நண்பர்கள் தான். எப்போதும் சேர்ந்துதான் இருப்போம். ஆனந்த பாலாஜி வட்டிக்கு விடும் நபர்களிடம் நாங்கள் வசூல் செய்து அவருக்கு கொடுத்து வந்துள்ளோம்.
சிறு வயதிலிருந்தே நண்பர்கள்
கடந்த சில நாட்களுக்கு முன்பு அருள், சிலம்பு(எ)மணிகண்டன், கிஷோர் ஆகிய 3 பேரும் பணம் கேட்டு மிரட்டியதாக ஆனந்த பாலாஜியின் அப்பா கொடுத்த புகாரின் பேரில் அவர்கள் கைது செய்யப்பட்டனர். அப்போது ஆனந்த பாலாஜி எங்களிடம் ஜெயிலில் இருந்து 3 பேரும் வெளியே வரும்போது நீங்கள் அவர்களை கொலை செய்து விடுங்கள் என்று கூறினார். அதற்கு நாங்கள் நீ இப்போதுதான் எங்கள் நண்பர்கள், அவர்கள் 3 பேரும் நாங்களும் சிறுவயதிலிருந்தே நண்பர்கள். இதனால் நாங்கள் கொலை செய்ய மாட்டோம் என்று கூறினோம்.
மிரட்டிய பாலாஜி
இதையடுத்து ஆனந்த பாலாஜி எங்களிடம் நீங்கள் செய்யா விட்டால் நான் வேறு ரவுடியை வைத்து கொலை செய்து விடுவேன் என்றுகூறி மிரட்டினார். பின்னர் எங்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக கூப்பிட்டு மிரட்டினார். இதனால் நாங்கள் அவனை தீர்த்துக்கட்ட முடிவுசெய்தோம். இதனையடுத்து அவன் எங்கெங்கு செல்கிறார் என்று கண்காணித்தோம். காலை அவரது மனைவியுடன் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிகொண்டிருந்தார். அந்த நேரத்தில் நாங்கள் ஆனந்த பாலாஜிக்கு திருமணம் ஆகி ஒரு மாதம் தான் ஆகிறது. இதனால் அவரை கொலை செய்ய வேண்டாம் என்று முடிவு செய்தோம். ஆனால் மனைவியை விட்டு சிறிது நேரத்தில் எங்களுக்கு போன் செய்தார்.
சரமாரி வெட்டு
நீங்கள் கொலை செய்யவில்லை என்றால் நான் உங்களை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினார். இதனால் ஆத்திரத்தில் இருந்த நாங்க ஆனந்த பாலாஜி எப்போதும் எல்லைபிள்ளை சாவடி வெங்கடேஸ்வரா நகரில் உள்ள டீக்கடையில் சிகரெட் பிடிக்க வருவது வழக்கம். அதேபோல் அவர் அங்கு வந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து சென்ற நாங்கள் அங்கே வைத்து வெட்டினோம். அவர் சாக மாட்டார் என நினைத்தோம். ஆனால் அவர் இறந்து போனார் என்று அவர்கள் கூறினர். இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.