புதுச்சேரி மக்கள் இனி ஈசியாக சொந்த ஊருக்கு திரும்பலாம்.. புது வெப்சைட் துவக்கம்
புதுச்சேரி: ஊரடங்கு உத்தரவால் வெளிநாடு மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்து சிக்கி தவிப்பவர்களை புதுச்சேரி கொண்டுவர புதுச்சேரி அரசின் சார்பில் இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் வெளிமாநிலங்களில் இருந்து சொந்த ஊர் செல்ல முடியாமல் சிக்கி தவிப்பவர்களை, அவரவர் மாநிலங்களுக்கு அனுப்ப மாநில அரசுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. இதற்காக புதிய வழிகாட்டு நெறிமுறைகளை உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் கல்வி, வேலைவாய்ப்பு, விடுமுறை, யாத்திரை, மருத்துவ சிகிச்சை மற்றும் பிற காரணங்களுக்காக, வெளிநாடு மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்களுக்குச் சென்ற புதுச்சேரி மக்கள் ஆங்காங்கே சிக்கித் தவித்து வருகின்றனர். இதேபோல் புதுச்சேரி மாநிலத்திற்கு பல்வேறு காரணங்களுக்காக வந்த பிற மாநிலங்களைச் சேர்ந்த மக்களும் புதுச்சேரியின் பகுதியில் ஊரடங்கால் சிக்கியுள்ளனர். அவ்வாறு சிக்கித் தவிக்கும் மக்களின் நிலையை கருத்தில் கொண்டு அவர்கள் தங்கள் இல்லம் சென்றடைய புதுச்சேரி அரசின் சார்பில் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
அதில் வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் புதுச்சேரி சார்ந்த மக்கள், இந்திய மாநிலங்களில் சிக்கித்தவிக்கும் புதுச்சேரியை சேர்ந்த மக்கள், புதுச்சேரியில் சிக்கியிருக்கும் இந்திய மாநிலங்களை சேர்ந்தவர்கள் http://welcomeback.py.gov.in என்ற இணையதளத்தில் தங்கள் பதிவுகளை செய்துகொள்ளலாம்.
பதிவு செய்த பிறகு வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் நபர்களை திரும்ப கொண்டு வருவதற்கு புதுச்சேரி அரசு இந்திய அரசாங்கத்துடன் ஒருங்கிணைந்தும், மற்றவர்களுக்கு அந்தந்த மாநில அரசுகள் ஒருங்கிணைந்து இந்திய அரசின் வழிகாட்டுதலின்படி தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கென கட்டணமில்லா எண் 1077 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் எனவும் புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.