ஆம்புலன்ஸ் வழங்க மறுப்பு.. இறந்து போன அண்ணன்.. தள்ளு வண்டியில் இழுத்து சென்ற தங்கை!
புதுச்சேரி: புதுச்சேரியில் ஒரு கொடுமையான சம்பவம் நடந்துள்ளது.
தமிழகம் - புதுச்சேரி எல்லையான, விழுப்புரம் மாவட்டம் சுத்துக்கேணி கிராமத்தில் இயங்கி வரும் செங்கல் சூளையில் விழுப்புரத்தை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் பணிபுரிந்து வந்தார்.
இவருக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து அருகில் உள்ள புதுச்சேரி மாநில ஆரம்ப சுகாதாரநிலையத்தில் ஆம்புலன்ஸ் கேட்கப்பட்டது. தமிழக பகுதி என்பதால் ஆம்புலன்ஸ் வழங்க புதுச்சேரி அரசு மருத்துவமனை நிர்வாகம் மறுத்துவிட்டது.
இந்நிலையில் செங்கல் சூளையில் பயன்படுத்தப்படும் தள்ளுவண்டியில் மருத்துவமனைக்கு அவரது தங்கை மூலம், அவர் அழைத்து செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே சுப்பிரமணி இறந்துவிட்டதாக கூறினர்.
இறந்தவரின் சடலத்தை சொந்த ஊருக்கு எடுத்து செல்ல, புதுவை காவல்துறையின் உதவியுடன் மாற்று ஏற்பாடு செய்து, சுப்பிரமணி உடலை உறவினர்கள் சொந்த ஊருக்கு எடுத்து சென்றனர்.
வட மாநிலங்களில்தான் இப்படிப்பட்ட கொடுமைகளை நாம் பார்த்துள்ளோம். மருத்துவ வசதியில் ஓங்கி உயர்ந்து நிற்கும் நம்ம ஊரிலும் இப்படி என்றால் என்நதான் செய்வது.என்னய்யா கொடுமை இது.. மனிதாபிமானம் இப்படிக் கூடவா மரத்துப் போகும்!