சிங்கப்பூரில் இருந்து புதுச்சேரி வந்தவருக்கு கொரோனா இல்லை.. நிம்மதியாக வீடு திரும்பும் இளைஞர்
புதுச்சேரி: கொரோனா வைரஸ் அறிகுறியுடன் புதுச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது, புனே ஆய்வகத்திற்கு அனுப்பப்பட ஆய்வில் தெரியவந்துள்ளது.
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது. இதனால் அங்கு வசிக்கும் வெளிநாட்டவர்கள் தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்பி வருகின்றனர். இந்திய அரசும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

புதுச்சேரி மாநிலத்திலும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை தீவிரப்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலால் யாரேனும் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்க 8 படுக்கைகள் கொண்ட தனிப்பிரிவு கோரிமேடு அரசு தொற்று நோய் மருத்துவமனையிலும், ஜிப்மர் மருத்துவமனையிலும் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் தனியார் மருத்துவமனைகளில் 5 படுக்கைகள் கொண்ட தனி பிரிவும் தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பணி நிமித்தமாக சிங்கபூருக்கு சென்று புதுச்சேரி திரும்பிய வாலிபர் ஒருவர் மற்றும் விழுப்புரத்தை சேர்ந்த ஒருவருக்கும் கடுமையான காய்ச்சல் மற்றும் சளி இருந்ததால் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் இருக்கலாம் என்று கருதப்பட்டது. இதைத்தொடர்ந்து ஒருவர் புதுச்சேரியில் உள்ள மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவமனையிலும், மற்றொருவர் கோரிமேடு இதயநோய் மருத்துவமனையிலும் உள்ள கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

மேலும் அவர்களிடமிருந்து ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு புனேவில் உள்ள மத்திய அரசின் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன. சோதனையில் அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து அவர்கள் இருவரும் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும் சில நாட்கள் அவர்களை தனிமையில் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications