புதுச்சேரியில் அதிமுக அழைப்பு விடுத்த பந்த்..கல்வீச்சு..அன்பழகன் வீடு புகுந்து கைது செய்த போலீஸ்
புதுச்சேரி: மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி அதிமுக சார்பில் முழுஅடைப்பு போராட்டம் நடைபெறுவதால் கடைகள் மூடப்பட்டுள்ளன. பேருந்து நிலையம் வெறிச்சோடி உள்ளது. டெம்போக்கள் மீது கல்வீசியதில் கண்ணாடிகள் உடைந்தன. முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த அதிமுக செயலாளர் அன்பழகனை அவரது வீட்டில் போலீசார் கைது செய்தனர்.
மாநில அஸ்தஸ்து இல்லாததால் மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற முடியாமல் மன உளைச்சல் ஏற்படுகிறது என முதலமைச்சர் ரங்கசாமி சில நாட்களுக்கு முன்பு மனக்குமுறலை வெளிப்படுத்தினார். இதையடுத்து மாநில அந்தஸ்து விவகாரம் புதுச்சேரியில் சூடுபிடித்தது.

நேரு எம்எல்ஏ தலைமையில் சமூக இயக்கங்கள் மாநில அந்தஸ்து கோரிக்கைக்கு ஆதரவு திரட்டி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று புதன்கிழமை மாநில அந்தஸ்தை வலியுறுத்தி முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் அறிவித்தார்.
இந்த பந்த் போராட்டத்துக்கு திமுக, காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. புத்தாண்டு கொண்டாட்ட காலம் என்பதால் வியாபாரத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என அவர்கள் தெரிவித்தனர். வர்த்தகசபை, வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு, தொழில் வர்த்தக கூட்டமைப்பு மற்றும் வியாபார வர்த்தக சங்கத்தினர் பந்த் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பந்த் போராட்ட தேதியை மாற்றி அறிவிக்கவும் வலியுறுத்தினர். இந்நிலையில் அதிமுக சார்பில் முழுஅடைப்பு போராட்டம் தொடங்கியுள்ளது. பந்த் காரணமாக வெளி மாவட்டங்களில் இருந்து பேருந்துகள் புதுச்சேரிக்கு வரவில்லை. இதனால் புதுச்சேரி பேருந்து நிலையம் வெறிச்சோடி உள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக முக்கிய இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
சாலையில் சென்ற 2 டெம்போக்கள் மீது கல் வீசப்பட்டுள்ளது. பழைய பேருந்து நிலையம் அருகே இருந்த 2 டெம்போக்கள் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்கியதில் கண்ணாடிகள் உடைந்தன. இதனிடையே முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த அதிமுக செயலாளர் அன்பழகனை அவரது வீட்டில் போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications