மணிப்பூரில் நியாயமான விசாரணை நடக்கிறது.. தமிழ்நாட்டில் ரொம்ப மோசம்.. சொல்கிறார் வானதி சீனிவாசன்!
புதுச்சேரி: "மணிப்பூரில் நியாயமான விசாரணை நடக்கிறது. பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் குற்றவாளி எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுகிறார்கள், ஆனால் தமிழகத்தில் அப்படி எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை." என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் திமுக அரசை விமர்சித்துள்ளார்.
புதுச்சேரி பாஜக நிர்வாக அமைப்புத் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பாஜக மகளிரணி தேசிய தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏவுமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டார்.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த வானதி சீனிவாசன், "தமிழகத்தில் மாணவி ஒருவருக்கு கொடுமை நடந்திருக்கிறது. அந்த சம்பவத்திற்கு பிறகு ஒருவர் கைது செய்யப்பட்ரார். அந்த நபர் ஆளும் கட்சிக்கு நெருக்கமாக இருக்கிறார். பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட அந்த நபர், கைதுக்குப் பிறகு இன்னொரு நபர் குறித்தும் பேசியிருக்கிறார்.
இந்த வழக்கில் நியாயமான விசாரணை நடைபெற வேண்டும் என்பதற்காக, மதுரையில் குஷ்பு தலைமையில் பாஜக பேரணி நடைபெற்றது. அந்தப் பேரணியில் கலந்து கொண்டவர்களை காவல்துறை கைது செய்திருக்கிறது. அந்த செயலை கண்டிக்கும் விதமாக தமிழக ஆளுநரை சந்திக்க இருக்கிறோம்.
தமிழக அமைச்சர் ரகுபதி இந்த விவகாரத்தில் புரிந்து பேசுகிறாரா என்று தெரியவில்லை. பாஜக ஆளும் மாநிலங்களில் எங்கு பெண்களுக்கு எதிராக குற்றங்கள் நிகழ்ந்தாலும் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மணிப்பூரில் நியாயமான விசாரணை நடக்கிறது.
ஆனால் தமிழகத்தில் அப்படி எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. சென்னை அண்ணா பல்கலையில் பாதிக்கப்பட்ட மாணவி விவரங்களுடன் எஃப்.ஐ.ஆர் வெளியே வந்திருக்கிறது. பாதிக்கப்பட்ட மாணவிக்கு எதிரான செயல்களுக்காக தமிழக அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்.
நாட்டில் எங்கு பெண்களுக்கு பாதிப்பு நிகழ்ந்தாலும் பாஜக குரல் கொடுக்கிறது. சட்டரீதியான பாதுகாப்பு தருகிறோம். பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் குற்றவாளி எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுகிறார்கள்" எனத் தெரிவித்தார்.
முன்னதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, "திமுக ஆட்சியில் துணிச்சலாகப் பெண்கள் புகார் அளிப்பதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் புகார் அளித்தவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் விதமாக எதிர்க்கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. உயர் நீதிமன்றமே எதிர்கட்சிகளின் செயலைத் தாங்கமுடியாமல் அவர்கள் முகத்திரையைக் கிழித்துத் தொங்கவிட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்ட விவகாரத்தில் தமிழ்நாடு காவல்துறை மேற்கொண்ட விரைவான நடவடிக்கையால் குற்றவாளி உடனடியாகக் கைது செய்யப்பட்டதை மக்கள் அறிவார்கள். தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறுபவர்கள் மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களுக்கு எல்லாம் சென்று பார்த்துவிட்டு வரட்டும்" எனப் பேசி இருந்தார்.












Click it and Unblock the Notifications