பெற்றோர்களால் சிறை வைக்கப்பட்ட காதலி.. ஆட்கொணர்வு மனு மூலம் கரம்பிடித்த புதுவை காதலன்
புதுச்சேரி: பெற்றோர்களால் சிறைவைக்கப்பட்டிருந்த காதல் மனைவியை நீதிமன்றத்தில் ஆட் கொணர்வு மனு தாக்கல் செய்து கரம்பிடித்திருக்கிறார் புதுச்சேரி இளைஞர்.
புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (28). இவர் முருங்கப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சுகுமார் என்பவரது மகளான மருத்துவ மாணவி ராகவி என்பவரை காதலித்து வந்தார்.

இதற்கு மாணவியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்கவே, கடந்த மார்ச் 12 ஆம் தேதி மணிகண்டனும், ராகவியும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர்.
இதனிடையே தனது மகள் வீட்டில் இருந்து மாயமானதாக ராகவியின் தந்தை சுகுமாறன் அரியாங்குப்பம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையறிந்த ராகவியும், அவரது காதல் கணவர் மணிகண்டனும் அரியாங்குப்பம் காவல்நிலையத்திற்கு வந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், தனது காதல் கணவர் மணிகண்டனுடன் செல்ல விரும்புவதாக ராகவி தெரிவித்தார்.
ஆனால் போலீசார் ராகவியை அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். போலீசாரின் நடவடிக்கையால் அதிர்ச்சியடைந்த மணிகண்டன் சென்னை உயர்நீதிமன்றத்தில், தனது காதல் மனைவியை கண்டுபிடித்து தருமாறு ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
இதன்படி இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி கிருபாகரன், வீடியோ கான்பரன்சிங் மூலம் மாணவி ராகவியிடம் விசாரணை நடத்தினார். பின்னர் அரசு வழக்கறிஞர், காதல் கணவர் மணிகண்டன், ராகவியின் தந்தை சுகுமாறன் ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது மாணவி ராகவி தனது விருப்பத்திற்கு எதிராக பெற்றோருடன் போலீசார் அனுப்பி வைத்துவிட்டதாகவும், ஆனால் கணவருடன் வாழ விரும்புவதாகவும் தெரிவித்தார். இதையடுத்து மனுதாரரின் கோரிக்கையை ஏற்றுகொண்ட நீதிபதி, ராகவியை அவரது காதல் கணவருடன் சேர்ந்து வாழ அனுமதித்தார்.
மேலும் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறும் போலீசாருக்கு உத்தரவிட்டார். நீதிமன்ற உத்தரவுபடி ராகவியை அவரது காதல் கணவர் மணிகண்டனுடன் போலீசார் சேர்த்து வைத்தனர்.












Click it and Unblock the Notifications