அதிகாரம் இல்லாத நீங்க எதுக்கு ஆய்வு செய்ய வரீங்க.. பொதுமக்கள் கேள்வியால் கடுப்பான நாராயணசாமி
புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனாவால் தடை செய்யப்பட்ட பகுதியில் ஆய்வுக்கு சென்ற முதலமைச்சர் நாராயணசாமியிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி அருகே அரியாங்குப்பம் சொர்ணா நகர் பகுதியில் 3 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து சொர்ணாநகர் மற்றும் அம்பேத்கர் நகர், பி.சி.பி. நகர், கோட்டைமேடு, காலாந்தோட்டம், சிவகாமி நகர், கண்ணம்மா தோட்டம், அருந்ததிபுரம் உள்ளிட்ட பகுதிகள் கடந்த ஏப்ரல் 1 ந் தேதி முதல் சீல் வைக்கப்பட்டு, கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சொர்ணாநகரில் கொரோனா தொற்று ஏற்பட்டு 35 நாட்களுக்கு மேலாகியும், மேற்கொண்டு யாருக் கும் தொற்று ஏற்படவில்லை. இருப்பினும் கட்டுப்பாடுகள் அகற்றப்படவில்லை. இதனால் தங்கள் பகுதியில் கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டுமென அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று முதலமைச்சர் நாராயணசாமி சொர்ணா நகர் பகுதிக்கு ஆய்வுக்கு சென்றார். அப்போது அப்பகுதி மக்கள் நீண்டநாட்களாக அடைபட்டு அவதிப்படுவதாகவும், தங்கள் பகுதியை விடுவிக்க வேண்டும் என்றும் கூறினர். அப்போது நாராயணசாமி மண்டலங்களாக பிரிப்பதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் கிடையாது. மத்திய அரசுதான் இதனை முடிவு செய்கிறது என தெரிவித்தார். அப்போது அப்பகுதியினர், அதிகாரம் இல்லாவிட்டால் எதற்கு ஆய்வுக்கு வருகிறீர்கள்? என எதிர்கேள்வி கேட்டனர். இன்னும் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு சிலர் விடுவித்து விடு, விடுவித்து விடு என கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டது.

ஒரு சிலர் அதிகாரம் பெறுவதற்காக உண்ணாவிரதம் இருக்கவும் தயார் என கூறினர். இதனையடுத்து முதலமைச்சர் நாராயணசாமி மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும், விரைவில் சொர்ணாநகர் பகுதிக்கு தளர்வு அளிக்கப்படும் என்றும் உறுதி அளித்துவிட்டு, அங்கிருந்து வேகமாக புறப்பட்டு சென்றார்.












Click it and Unblock the Notifications