திமுக கையெழுத்து இயக்கம்.. புதுச்சேரியில் தொடங்கி வைத்த நாராயணசாமி
புதுச்சேரி: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி மாநில திமுக சார்பில் நடத்தப்பட்ட கையெழுத்து இயக்கத்தை முதல்வர் நாராயணசாமி தொடக்கி வைத்தார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் அரசியல் கட்சிகள், அமைப்புகள், கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
அதன் ஒரு பகுதியாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்தது போன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி கையெழுத்து இயக்கப்போராட்டம் நடைபெற்று வருகின்றது.
இதன் ஒரு பகுதியாக புதுச்சேரி மாநில திமுக சார்பில் காமராஜ் சிலை அருகே கையெழுத்து இயக்கப் போராட்டம் இன்று தொடங்கியது. இதை மாநில முதல்வர் நாராயணசாமி கலந்து கொண்டு முதல் கையெழுத்திட்டு தொடக்கி வைத்தார்.
கையெழுத்து இயக்கத்தில் கலந்து கொண்ட முதல்வர் நாராயணசாமி பேசுகையில், புதுச்சேரியில் வரும் 12 ஆம் தேதி கூடவுள்ள சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில், குடியுரிமை சட்டத் திருத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும், புதுச்சேரி மக்கள் அரசு பக்கம் இருப்பதால் மத்திய அரசு எந்த நடவடிக்கை எடுத்தாலும் அதை சந்திக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதனிடையே சட்டப்பேரவை வளாகத்தில் முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சியினர் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கையில் பதாகைகளை ஏந்தி மத்திய அரசுக்கு எதிராக தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர்.