முதலில் மதுக் கடை திறப்பு நேரம் குறைப்பு.. படிப்படியாக மதுவிலக்கு.. நாராயணசாமி அதிரடி!
புதுச்சேரி: புதுச்சேரியில் மதுக்கடைகள் திறப்பு நேரத்தை குறைத்து, படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தபடும் என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக புதுச்சேரி சமூக நல வாரியம், தேசிய சமூக பாதுகாப்பு நிறுவனம் இணைந்து ஆசிரியர்களுக்கு போதைப்பொருள் பயன்பாட்டை தடுப்பதற்கான இரண்டு நாள் திறன் மேம்பாட்டு கருத்தரங்கம் கல்வித்துறை இயக்குனர் அலுவலக கருத்தரங்கு கூடத்தில் நடைபெற்றது.

கருத்தரங்கை குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்து பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரியை போதைப்பொருள் இல்லா மாநிலமாக மாற்ற கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.
புதுச்சேரிக்கு கஞ்சா எங்கிருந்து வருகிறது என நன்றாக தெரியும். புதுச்சேரியில் திருவண்ணாமலையை சேர்ந்த ஒரு பெண் தாதா கஞ்சா விற்பனை செய்கிறார். ரெயில் மூலம் கஞ்சா புதுச்சேரிக்கு வருகிறது. சிறுவர்கள் மூலம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுகிறது. இதனை தடுக்க கடும் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ஆசிரியர்கள் மாணவர்களுக்கு படிப்போடு சேர்த்து நல்ல ஒழுக்கத்தையும் கற்றுத் தர வேண்டும். அவர்களை கண்காணிக்கும் பொறுப்பு ஆசிரியர்களுக்கு உண்டு என்றார். மேலும் புதுச்சேரியில் மதுவை ஒழிக்க நினைக்கிறோம். ஆனால் அரசுக்கு வருமானம் அதிலிருந்துதான் வருகிறது.
மத்திய அரசு புதுச்சேரி மாநிலத்திற்கு போதுமான நிதியை தருவதில்லை. எனவே நம்மால் மதுவை உடனடியாக ஒழிக்க முடியவில்லை. அதனால் முதலில் மதுக்கடை திறப்பு நேரத்தை குறைத்து, பின்னர் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications