புதுச்சேரியில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ததற்கு எதிர்ப்பு.. திமுக, காங்கிரஸ் வெளிநடப்பு
புதுவை: புதுச்சேரி சட்டசபையில் இன்று (வியாழக்கிழமை) இடைக்கால பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்தார். அடுத்த 5 மாத செலவினங்களுக்காக ரூ.4,634 கோடிக்கு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தார்.
யூனியன் பிரதேசமான புதுவையில் ஆண்டு தோறும் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். யூனியன் பிரதேசம் என்பதால் மத்திய அரசிடம் பட்ஜெட் விவரங்களை தாக்கல் செய்து ஒப்புதல் கிடைத்த பிறகே தாக்கல் செய்யப்படுவதும் நடைமுறைக்கு கொண்டு வருவதும் புதுவையில் வழக்கமாக இருந்து வருகிறது.

அந்த வகையில், கடந்த 2011-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 10 ஆண்டுகளாக இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தது. 2021 ஆம் ஆண்டு ஆட்சி அமைத்த என்.ஆர்.காங்கிரஸ்- பாஜக கூட்டணி அரசும் இடைக்கால பட்ஜெட்டையே தாக்கல் செய்தது. எனினும், கடந்த ஆண்டு மார்ச் 9-ந் தேதி முதல்வர் ரங்கசாமி 2023-24-ம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதன்பிறகு பட்ஜெட் நிறைவேற்றப்பட்டது.
இதனால், 2024-2025- நிதி ஆண்டிலும் முழு பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் லோக்சபா தேர்தல் நடைபெற இருப்பதால் இந்த ஆண்டு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதன்படி, இன்று காலை 9.45 மணிக்கு சட்டசபை கூடியது.
சட்டசபை கூடியதும் நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி, அரசின் செலவினங்களுக்கு ஒப்புதல் பெற இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அடுத்த 5 மாத செலவினங்களுக்காக ரூ.4,634 கோடிக்கு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இதையடுத்து முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யாதது மக்களுக்கு செய்யும் துரோகம் என குற்றம்சாட்டி புதுவை சட்டப்பேரவையில் இருந்து காங்கிரஸ், திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதை முன்னிட்டு புதுவை சட்டசபையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருந்தது. இதேபோல் முதல்வரை பார்க்க வரும் பொதுமக்கள் தீவிர பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications