தீபாவளி பரிசை அறிவித்த முதல்வர் ரங்கசாமி.. புதுச்சேரி குடும்ப அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்
புதுச்சேரி: தீபாவளி பண்டிகை விரைவில் கொண்டாடப்படவுள்ள நிலையில், புதுச்சேரி மக்களுக்கு நல்ல செய்தி ஒன்றை அம்மாநிலத்தின் முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். ரேஷன் அட்டைதாரர்களுக்கு தீபாவளிக்குள் ரேஷன் கடைகளில் இலவச அரிசி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது பொதுமக்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலக சுற்றுலா தினத்தையொட்டி புதுச்சேரியில் உள்ள சித்தர் சுற்றுலாப் பயண நிகழ்ச்சி தொடங்கி வைக்கப்பட்டது. துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி, பேரவைத் தலைவர் செல்வம், சுற்றுலாத் துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியைத் துவக்கிவைத்தனர்.

நிகழ்ச்சியைத் தொடர்ந்து, முதல்வர் ரங்கசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: புதுச்சேரி மிகவும் அழகிய மாநிலம் ஆகும். பழமையான கட்டடங்கள், தெருக்கள், கடற்கரை உள்ள மாநிலமாகும். அதனால் தான் புதுச்சேரிக்கு சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வர விரும்புகின்றனர். சுற்றுலாத் தலம் மட்டுமல்ல புதுச்சேரி ஒரு ஆன்மிக பூமி, சித்தர்கள் வாழ்ந்த மற்றும் வாழ்ந்து வரும் பூமியாகும்.
புதுச்சேரியில் அரவிந்தர் ஆசிரமம், சித்தானந்தர் கோயில், மணக்குள விநாயகர் கோயில் என பல்வேறு ஆன்மிகத் தலங்கள் உள்ளன. அதுமட்டுமில்லாமல் பொழுதுபோக்கு கடற்கரை, அமைதியான சூழலும் இங்குள்ளது. அதேபோல, 21 கிலோ மீட்டர் தொலைவுக்கு கடற்கரையும் உள்ளது. கிராமப் பகுதிகளில் உள்ள அனைத்துக் கடற்கரைகளை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.
புதுச்சேரியில் கீழூர், பாகூர், குருவிநத்தம் என அழகிய கிராமங்கள் உள்ளன. அனைத்து நாடுகளின் உணவும் இப்பகுதிகளில் கிடைக்கும். இங்கு சுற்றுலாவை வளர்க்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. புதுச்சேரியில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷனில் விரைவில் இலவசமாக அரிசி வழங்கப்படும். அதற்கான ஒப்புதலைப் பெறப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு தீபாவளிக்குள் ரேஷன் கடைகளில் இலவச அரிசி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு உள்ளது. எனவே, எங்களுக்குத் தேவையான நிதியை எப்போதும் மத்திய அரசு தந்து வருகிறது. அதேபோல, பிரதமரை எப்போது வேண்டுமானாலும் நாங்கள் சந்திக்கலாம். புதுச்சேரியில் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு டெங்கு கட்டுப்பாட்டுக்குள் தான் உள்ளது.
டெங்கு மட்டுமில்லாமல் மற்ற காய்ச்சல்களையும் கட்டுப்படுத்த அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நோயைத் தடுக்கும் வகையில் கொசு மருந்து தெளிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். அனைத்து துறைகளும் தற்போது இணைந்து பணியாற்றி வருகின்றனர். சுகாதாரத் துறை இயக்குநர் விரைவில் நியமிக்கப்படுவார்.
பொதுமக்களுக்குத் தேவையான மருந்து, மாத்திரைகள் அரசு மருத்துவமனைகளில் போதுமான அளவில் இருப்பில் உள்ளன. புதுச்சேரியின் தேவைகள் குறித்து மத்திய அரசுக்கு நிறைய மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. அதேபோல, தற்போது மத்திய உள்துறைச் செயலாளரிடமும் மனு அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications