"எங்களுக்கு அதிகாரமும் இல்லை.. அதிகாரிகளின் ஒத்துழைப்பும் இல்லை!" புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வேதனை
புதுச்சேரியில் இப்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.
புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபையில் இப்போது பட்ஜெட் கூட்டத்தொடரில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் பேசிய முதல்வர் ரங்கசாமி, புதுச்சேரி அரசுக்கு போதிய அதிகாரம் இல்லை என்று குறிப்பிட்டார்.
புதுச்சேரியில் ரங்கசாமி தலைமையிலான என்ஆர் காங்கிரஸ்- பாஜக கூட்டணி அரசு இப்போது நடந்து வருகிறது. இரு தரப்பிற்கும் இடையே சுமுகமான உறவு இருப்பதாகவே இரு தரப்பும் கூறி வருகிறது.
இருப்பினும், இரு தரப்புமே திரைமறைவில் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்த காலங்களில் இது குறித்து புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வெளிப்படையாகவே அதிருப்தி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி
இப்போதும் அதேபோல ஒரு சம்பவம் தான் மீண்டும் நடந்துள்ளது. தமிழ்நாடு, கேரளா போலப் புதுச்சேரி தனியாக ஒரு மாநிலம் இல்லை. இன்னும் புதுச்சேரி ஒரு யூனியன் பிரதேசமாகவே உள்ளது. அதாவது மாநிலங்களுக்கு இருப்பதைப் போலப் புதுச்சேரிக்கு முழு அதிகாரம் இல்லை. மத்திய அரசுக்கும் துணை நிலை ஆளுநருக்கும் சில அதிகாரங்கள் இருக்கிறது. பட்ஜெட் கூட மத்திய அரசின் ஒப்புதலுக்குப் பின்னரே தாக்கலாகும்.

பட்ஜெட் கூட்டத்தொடர்
இந்தாண்டிற்கான புதுச்சேரி பட்ஜெட்டை கடந்த மார்ச் 13ஆம் தேதி புதுவை முதல்வரும் நிதித்துறையைக் கைவசம் வைத்திருப்பவருமான ரங்கசாமி தாக்கல் செய்தார். அதில் கேஸ் சிலிண்டர் மானியம், பெண் குழந்தைகளுக்கு வைப்பு நிதி என்று பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தது. இப்போது புதுச்சேரி சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடரில் மானியக் கோரிக்கை மீதான விவாதமும் உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர்களின் பதிலும் அளிக்கப்பட்டு வருகிறது. அப்போது ஸ்மார்ட் சிட்டி திட்டம் குறித்து காங்கிரஸின் வைத்தியநாதன் கேள்வி எழுப்பினார்.

ஸ்மார்ட் சிட்டி பணிகள்
அதற்குப் பதிலளித்த முதல்வர் ரங்கசாமி, "ஸ்மார்ட் சிட்டி ஒப்பந்தங்களில் நிர்வாக சிக்கல்கள் இருக்கிறது. அதைச் சரி செய்ய வேண்டும் என்பதே எங்கள் எண்ணம். இருப்பினும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்குத் தனியாகக் குழு இருக்கிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இப்போது வரை 1200 கோடியில் பணிகள் நடந்திருக்க வேண்டும். இருப்பினும், இப்போது வரை ரூ.256 கோடிக்குக் கூட பணிகள் நடக்கவில்லை. வரும் ஜூன் மாதத்திற்குள்ளாவது இந்த பணிகள் நிறைவடையுமா எனத் தெரியவில்லை.

வேகம் இல்லை
கடந்த ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் முறையாக நடைமுறைப்படுத்தவில்லை.. அப்போது தலைமைச் செயலாளராக இருந்தவர் திட்டத்தை வேகப்படுத்தவில்லை. இப்போதும் கூட பணிகள் எங்கும் வேகமாக நடப்பதில்லை.. இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கும், அரசுக்கும் தொடர்பே இல்லாமல் இருக்கிறது. திட்டத்தின் தலைவராக இருக்கும் தலைமைச் செயலாளரே இது குறித்து அனைத்திலும் இறுதி முடிவு எடுக்கிறார். அவரிடமே அனைத்து நிதி அதிகாரம் உள்ளது.

அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லை
இதனால் என்ன பணிகள் நடக்கிறது என்று கூடச் சொல்வதில்லை. அவ்வளவு ஏன் இது தொடர்பான கோப்புகள் கூட அரசுக்கு வருவதில்லை. கேட்டால் தான் சொல்கிறார்கள்.. ஸ்மார்ட் சிட்டி பணிகளில் அரசு சில முடிவுகள் எடுக்கும்போது அதிகாரி ஒத்துழைப்பு அளிப்பதில்லை. நாம் மாநிலம் என்று சொன்னாலும் புதுச்சேரிக்கு இன்னும் முழு அதிகாரம் இல்லை.. மத்திய அரசிடம் வலியுறுத்தியே பணிகள் நடந்து வருகிறது.

முழு அதிகாரம் இல்லை
உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைக்கின்றீர்கள்.. ஆனால், முழு அதிகாரம் இல்லாத நிலையில் தான் புதுச்சேரி அரசு உள்ளது. இதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். மாநில சொந்த வருவாயை உயர்த்தியே நிர்வாகத்தைச் சமாளித்து வருகின்றேன். கடந்த காலங்களில் மத்திய அரசு கூடுதலாக 90% வரை நிதி வழங்கிய நிலையில், இப்போது அது படிப்படியாகக் குறைந்து 23%க்கு வந்துவிட்டது. அதேநேரம் நமது வருவாய் 61%ஆக உயர்த்திருக்கிறோம்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications