இன்று 2வது இரவு.. பிளாட்பாரத்தில் படுத்துத் தூங்கிய நாராயணசாமி, அமைச்சர்கள்!
புதுச்சேரி: புதுச்சேரி ஆளுநர் மாளிகைக்கு எதிரே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வரும் முதல்வர் நாராயணசாமியும், அவரது அமைச்சரவை சகாக்களும் இன்று 2வது நாளாக இரவில் சாலையோரம் படுத்துத் தூங்கினர்.
மக்கள் நலத்திட்டங்களுக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி இடையூராக உள்ளதாகக் கூறி முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில், அமைச்சர்கள், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கடந்த இரண்டு நாட்களாக ஆளுநர் மாளிகை வெளியே தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் தங்களுடைய அன்றாட அலுவல்களை சாலையில் அமர்ந்தவாறு செய்து வருகின்றனர். மேலும் உணவுகளையும் சாலையில் அமர்ந்தவாறே உண்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று இரண்டாவது நாளாக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் இரவு முழுவதும் சாலையிலேயே படுத்து தூங்கினர்.
தொடர்ந்து ஆளுநர் மாளிகை பகுதியில் அசாதாரன சூழ்நிலை நிலவி வருவதால் 100 க்கும் மேற்பட்ட உள்ளூர் போலீஸார் மற்றும் துணை ராணுவப் படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்தப் போராட்டம் எப்போது முடியும் என்று தெரியவில்லை. ஆனால் ஆளுநர் கிரண் பேடி இறங்கி வரும் வரை போராட்டமும் ஓயாது என்றே தெரிகிறது.