உருட்டுக்கட்டை, கம்பு.. ஆயுதங்களுடன் தாக்க முயன்ற பாஜகவினர்.. புதுச்சேரியில் வெடித்த மோதல்!
புதுச்சேரி: புதுச்சேரி பாஜக அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் முற்றுகை போராட்டம் நடத்த வந்த நிலையில், பாஜகவினர் கட்டை, கம்புகளுடன் தாக்குதல் நடத்தியதால் அங்கு பெரும் மோதல் வெடித்தது.
டெல்லியில் நடைப்ற்று வரும் உலக ஏஐ மாநாட்டின்போது இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் மாநாட்டு வளாகத்திற்குள் நுழைந்து சட்டையைக் கழற்றி போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைக் கண்டித்து புதுச்சேரி பாஜக இளைஞர் அணி தலைவர் ஆடலரசன் தலைமையில், காங்கிரஸ் தலைமை அலுவலகம் எதிரில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பியுமான ராகுல் காந்தியின் உருவ பொம்மையை எரித்து பாஜகவினர் போராட்டம் நடத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி பாஜக அலுவலகம் முன்பாக இன்று காங்கிரஸ் கட்சியினர் திரண்டனர். பாஜக அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
இதையடுத்து, அங்கு பாஜகவினர் கட்டை, கம்பு உள்ளிட்ட ஆயுதங்களுடன் குவிந்தனர். இதனை தொடர்ந்து இரு தரப்பும் கைகலப்பில் ஈடுபட்ட நிலையில், பாஜக அலுவலகம் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications