புதுச்சேரியில் தீயாய் பரவும் கொரோனா.. காரைக்காலில் பெண் மரணம்..தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
புதுச்சேரி: கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட பெண் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த பெண்ணிற்கு இணை நோய்கள் இருந்ததால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் தோன்றி உலகம் முழுவதும் பரவிய கொரோனா ஏராளமான உயிர்களை கபலீகரம் செய்தது. உலகம் முழுவதும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் பொருளாதார முடக்கம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து விஞ்ஞானிகள் பல்வேறு ஆய்வுகள் நடத்தி தொற்று பரவலை தடுக்க தடுப்பூசிகளை கண்டுபிடித்தனர். அவை பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டதின் விளைவாக தொற்று பரவல் படிப்படியாக கட்டுக்குள் வந்தது. இதனால் உலகம் முழுவதும் சகஜநிலை திரும்பியது.

கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஒமைக்ரானின் புதிய வகையான எக்ஸ்.பி.பி.1.16 வகை திரிபு பரவ தொடங்கி உள்ளது. முதலில் அமெரிக்கா, சிங்கப்பூர், இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, டென்மார்க் உள்ளிட்ட 14 நாடுகளில் காணப்பட்ட எக்ஸ்.பி.பி. வகை திரிபு பின்னர் இந்தியாவிலும் பரவ தொடங்கியது. இதனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது.
கடந்த பிப்ரவரி மாதம் வரை கொரோனா தினசரி பாதிப்பு 200க்கும் கீழ் இருந்த நிலையில் தற்போது 3 ஆயிரத்தை தாண்டி பதிவாகிவருகிறது.
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,824 பதிவான நிலையில், இன்று 3,641 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 18,389 லிருந்து 20,219 ஆக பதிவாகியுள்ளது. இந்தியாவில் இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,30,892 ஆக உள்ளது. இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,41,75,135 ஆக பதிவாகியுள்ளது.
நாடு முழுவதும் இதுவரை 220,66,11,814 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 2,799 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு,புதுச்சேரியில் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு 30 பேர் வீட்டு தனிமையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் காரைக்காலை சேர்ந்த 35 வயதுடைய பெண் ஒருவர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அந்த பெண் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
காரைக்காலில் ஓராண்டுக்குப் பிறகு பெண் ஒருவர் உயிரிழந்துள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது. அந்த பெண்ணிற்கு இணை நோய்கள் இருந்ததால் உயிரிழப்பு ஏற்பட்டதாக மருத்துவர்கள் விளக்கம் அளித்தனர். புதுச்சேரியில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால் அங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications