புதுச்சேரியில் பரபரப்பு.. கோவில் புளிசாதம், சுண்டல் சாப்பிட்ட 50 பேருக்கு வாந்தி, வயிற்றுப் போக்கு!
Recommended Video
புதுச்சேரி: புதுச்சேரியில் மிகவும் பிரசித்தி பெற்ற வேதபுரீஸ்வரர் கோவிலில் புளிசாதம், சுண்டல் சாப்பிட்ட 50 க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரியில் மிகவும் பிரசித்திபெற்ற வேதபுரீஸ்வரர் சிவன் கோவிலில் பிரதோஷம் தினத்தன்று பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் புளிசாதம், கடலை பிரசாதமாக வழங்கப்பட்டது
பிரசாதம் சாப்பிட்டவர்களுக்கு இரண்டு தினங்களாக வாந்தி, மயக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். இந்நிலையில் புதுச்சேரி அரசின் தலைமை மருத்துவமனையில் 50 க்கும் மேற்பட்டோர் கோவில் பிரசாதம் சாப்பிட்டதால் வயிற்றுபோக்கு ஏற்பட்டுள்ளதாக கூறி மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பலர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வருகை தந்தவாறு உள்ளனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் கூறுகையில், கோவில் நிர்வாக சார்பில் மடப்பள்ளியில் தயாரிக்கப்பட்டு வழங்கப்படும் பிரசாதம் சுகாதாரமான முறையில் செய்யப்படாததால்தான் வயிற்று போக்கு ஏற்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டினார்.
ஏற்கனவே சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிக்கப்படுவதாக பக்தர்கள் கோவில் நிர்வாகத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். சுகாதாரமற்ற உணவு தயாரிப்பது குறித்து இந்து சமய அறநிலையைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவில் பிரசாதம் சாப்பிட்டு ஒரே நேரத்தில் 50 க்கும் மேற்பட்டோர் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.