திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் ஆன்லைன் ஹோமம் - கொரோனா பாதிப்பு நீங்க நாராயணசாமி வழிபாடு
திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் நடைபெற்ற இ நவகிரக சாந்தி ஹோமத்தில் பங்கேற்ற புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கொரோனா பாதிப்பில் இருந்து நாட்டு மக்கள் விரைவில் குணமடைய வேண்டி பிராத்தனை செய்துள்ளார்.
காரைக்கால்: சனிபகவானை தரிசனம் செய்ய முடியவில்லை என்று கவலைப்படுகிறீர்களா? அந்த கவலை வேண்டாம் இணையம் மூலம் இனி சனிபகவானை தரிசனம் செய்வதோடு நவகிரக சாந்தி ஹோமத்தில் பங்கேற்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இணையவழி ஹோமத்தை தொடங்கி வைத்து பங்கேற்ற நாராயணசாமி, கொரோனா பாதிப்பில் இருந்து புதுச்சேரி மக்களும், நாட்டு மக்களும், உலக மக்களும் குணமடைய வேண்டும் என்று வேண்டிக்கொண்டார்.
நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்கு 15 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் 3 ஆயிரம் பேர் வரை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 எம்எல்ஏக்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்த நிலையில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி திருநள்ளாறு சனி பகவான் கோவிலில் ஆன்லைன் நவகிரக சாந்தி ஹோமத்தை தொடங்கி வைத்துள்ளார்.

நவகிரக பரிகாரத்தலங்களில் சனிபகவானுக்கு உரிய பரிகார தலம் காரைக்கால் அருகே திருநள்ளாறில் உள்ளது. இங்குள்ள
தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் அனுக்கிரக மூர்த்தியாக அருள்பாலித்து வரும் சனீஸ்வர பகவானை வேண்டினால் சனியால் ஏற்படும் சங்கடங்கள் தீரும் என்பது நம்பிக்கை.
இங்கு நடைபெற்று வந்த நவக்கிரக சாந்தி ஹோமம், கொரோனா பேரிடர் காரணமாக அரசு உத்தரவின்படி நிறுத்தப்பட்டது. தற்போது அரசு வழிகாட்டுதலின்படி கோயில் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்காக மட்டும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இ பாஸ் பிரச்சினை, போக்குவரத்து ரத்து போன்ற காரணங்களினால் வெளியூர் பக்தர்கள் கோவிலுக்கு வர முடியாத சூழ்நிலை உள்ளது. இந்த நிலையில் உள்ளூர், வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் தங்கள் வீடுகளிலிருந்தே நவக்கிரக சாந்தி ஹோமத்தில் பங்கேற்கும் வகையில் இ-நவக்கிரஹ சாந்தி ஹோமம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதற்காக www.thirunallarutemple.org என்ற தேவஸ்தான வலைப்பக்கத்தில், ஹோமம் பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதில் பக்தர்கள் தாங்கள் விரும்பும் கால பூஜைகளைப் பதிவு செய்து கொள்ளலாம். அவர்கள் பதிவு செய்த ஹோம பூஜைக்கான லிங்க் அவர்களது மின்னஞ்சல் முகவரிக்கு பிரத்யேகமாக அனுப்பி வைக்கப்படும். அதன் மூலம் அவர்கள் இ-நவக்கிரஹ சாந்தி ஹோமத்தில் பங்கு கொண்டு பயன்பெறலாம்.
இந்த இணையவழி ஹோமத்தைத் தொடங்கி வைத்த புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி நேற்று காலசாந்தி ஹோம பூஜையில் இணைய வழியில் அவரது வீட்டிலிருந்தே பங்கேற்று தரிசனம் செய்தார். அப்போது கொரோனா பாதிப்பிலிருந்து புதுவை மாநில மக்கள், இந்திய மக்கள், உலக மக்கள் அனைவரும் விரைவில் விடுபட்டு, வாழ்வில் எல்லா வளமும் பெற்றிட வேண்டி சங்கல்பம் செய்து சனீஸ்வர பகவான், பிரணாம்பிகை சமேத தர்பாரண்யேஸ்வரர் சுவாமிகளிடம் பிரார்த்தனை செய்தார் என்று அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications