மகனை கண்டித்த ஆசிரியர்.. நடுரோட்டில் வைத்து பெல்ட்டால் வெளுத்து வாங்கிய தந்தை!
புதுச்சேரி: புதுச்சேரியில் தனியார் பள்ளியில் தாமதமாக வந்த மாணவனை கண்டித்த ஆசிரிரை, அவரது தந்தை நடுரோட்டில் வைத்து பெல்ட்டால் வெளுத்து வாங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி கென்னடி நகரைச் சேர்ந்தவர் எட்வின்ராஜ். புதுச்சேரி காந்தி வீதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இதேபோல் ஆரோவில் திருநகரை சேர்ந்தவர் செல்வகுமார். தண்ணீர் கேன் விநியோகம் செய்யும் கடை வைத்துள்ளார். இவரது மகன் எட்வின்ராஜ் ஆசிரியராக பணியாற்றும் பள்ளியில் படித்து வருகிறார்.

இந்நிலையில் செல்வகுமாரின் மகன் பள்ளிக்கு தாமதமாக வந்துள்ளார். இதனை கண்ட எட்வின்ராஜ் ஏன் பள்ளிக்கு சரியான நேரத்தில் வரமுடியாதா என கேட்டு முதுகில் லேசாக அடித்துள்ளார். இதனால் மன வருத்தம் அடைந்த மாணவன் வகுப்பில் யாரிடமும் பேசாமல் அமைதியாக உட்கார்ந்துள்ளார்.
இதனை கண்ட எட்வின்ராஜ் ஏன் அமைதியாக உட்கார்ந்துள்ளாய் என கேட்டதற்கு, நீங்கள் என்னை கண்டித்தது மிகவும் அவமானமாக உள்ளது என கூறியுள்ளான். அதோடு விட்டுவிடாமல் பள்ளி முடிந்ததும் செல்போன் மூலம் தனது தந்தை செல்வகுமாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
உடனே செல்வகுமார் ஆரோவில்லில் இருந்து புறப்பட்டு புதுச்சேரிக்கு வந்துள்ளார். அப்போது பள்ளி முடிந்து எட்வின்ராஜ் வெளியில் வந்தபோது, அவரை வழிமறித்த செல்வகுமார் குடிபோதையில் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி, பெல்ட்டால் அடித்துள்ளார்.
இதுகுறித்து எட்வின்ராஜ் பெரியக்கடை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். பெரியக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வகுமாரை கைது செய்துள்ளனர். புதுச்சேரியில் மாணவரை கண்டித்த ஆசிரியரை, அவரது தந்தை சராமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications