ஒழுங்கா படிச்சு பாஸ் ஆகாமல், அரியர்ஸ் வைத்து.. ஊருக்குப் போகாமல் கஞ்சா விற்ற தெ. ஆ. மாணவர்கள்!
Recommended Video

புதுச்சேரி: புதுச்சேரியில் மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் கஞ்சா விற்ற வெளிநாட்டு கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
சுற்றுலா நகரமான புதுச்சேரிக்கு வெளிமாநில மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர். வெளி மாநில மற்றும் வெளிநாட்டு மாணவர்கள் புதுச்சேரியில் தங்கி கல்வி பயின்று வருவதாலும் பல்வேறு போதை பொருட்களின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது.
குறிப்பாக கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது. அந்தவகையில் புதுச்சேரி அருகே உள்ள ஆலங்குப்பம் சஞ்சீவி நகரில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் வெளிநாட்டு கும்பல் கஞ்சா விற்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

போலீசார் சோதனை
இதனையடுத்து சிறப்பு அதிரடிப்படை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு 3 பேர் மொத்தமாக கஞ்சாவை விற்று கொண்டிருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து அவர்களை சுற்றி வளைத்த போலீஸார் அவர்களை கைது செய்தனர்.

கஞ்சா, செல்போன்கள் பறிமுதல்
அவர்களிடம் இருந்து 26 பொட்டலங்கள் உள்ளிட்ட சுமார் 1.25 கிலோ எடையுள்ள கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.5400 பணமும், 3 செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

வெளிநாட்டு மாணவர்கள்
விசாரணையில், பிடிபட்டவர்கள் ஆப்ரிக்கா நாட்டின் காங்கோ பகுதியைச் சேர்ந்த பீஸ்ஜான, மிசோயோ ஆலன், ருவாண்டாவை சேர்ந்த சீரே கில்பர்ட் ஆகியோர் என்பது தெரியவந்தது. தொடர் விசாரணையில் பீஸ்ஜான் சேலத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பிடெக் படித்து வந்துள்ளார்.

கஞ்சா போதை
அதே கல்லூரில் பீஸ் ஜானுக்கு ஜூனியராக சீரே கில்பர்ட் படித்து வந்துள்ளார். அப்போது நண்பர்களான இருவருக்கும் இடையே கஞ்சா பழக்கம் ஏற்பட்டுள்ளது. பீஸ் ஜான் அரியர்ஸ் வைத்ததால் பிடெக் முடிக்க முடியாமல், சொந்த நாட்டிற்கு திரும்ப முடியவில்லை.

சேலத்தில் கஞ்சா விற்பனை
அதனால் அவர் புதுச்சேரி அருகே உள்ள ஆலங்குப்பம் சஞ்சீவி நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வந்தார். அவருக்கு கஞ்சா பழக்கம் இருந்து வந்துள்ளதால் அடிக்கடி சேலம் சென்று கஞ்சா வாங்கி வந்து பயன்படுத்தி வந்துள்ளார். இதனை அறிந்த சிலர் பீஸ்ஜானிடம் கஞ்சா கேட்டுள்ளனர்.

அதிக விற்பனை
இதையடுத்து அந்த பகுதியில் கஞ்சாவுக்கு அதிக மவுசு இருப்பதை அறிந்த பீஸ் ஜான் சேலத்தில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து ஆலங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், கல்லூரி மாணவர்கள், பொது மக்கள் என பலரிடம் கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளார். இவருடன் அவரது நண்பர்களான மிசோயோ ஆலன், சீரே கில்பர்ட் ஆகியோரும் சேர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

வார விடுமுறை விற்பனை
மிசோயோ ஆலன் ஐதராபாத்திலும், சீரே கில்பர்ட் சேலத்திலும் உள்ள கல்லூரியில் தற்போது படித்து வரும் நிலையில் வார விடுமுறையில் ஆலங்குப்பம் வந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். 3 பேரையும் கைது செய்த போலீஸார், அவர்களிடம் இந்தியாவில் தங்குவதற்கான விசா, பாஸ்போர்ட் வைத்துள்ளனரா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications