அரசு பள்ளியில் படித்த மாணவி சரண்யா.. ஐ.ஏ.எஸ்., தேர்வில் முதலிடம்.. அமைச்சர், கலெக்டர் பாராட்டு
காரைக்கால்: மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்திய சிவில் சர்வீஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 36 வது இடத்திலும் புதுச்சேரி மாநிலத்தில் முதலிடத்திலும் பிடித்த சரண்யாவிற்கு காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பாராட்டினார்கள்.*
Recommended Video
2019-ம் ஆண்டுக்கான மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்திய சிவில் சர்வீஸ் தேர்வுக்கான முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டன. இதில் தமிழகத்தைச் சேர்ந்த பலர் ஐஏஎஸ் அதிகாரிகளாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதில் காரைக்காலைச் சேர்ந்த ஆர்.சரண்யா அகில இந்திய அளவில் 36-வது இடத்தைப் பெற்றுள்ளார். இதன் மூலம் புதுச்சேரி மாநிலத்தில் முதல் இடத்தையும் சரண்யா பிடித்துள்ளர்.
கண்கள் இருண்டாலும்... தன்னம்பிக்கை இருளவில்லை... ஐ.ஏ.எஸ்.தேர்வில் வெற்றிகண்ட பூர்ணசுந்தரி
3வது முயற்சி
காரைக்கால் பாரதிதாசன் நகரைச் சேர்ந்த ஏ.ராமச்சந்திரன்- அமுதா தம்பதியர் மகள் சரண்யா. இவர் தனது 26 வது வயதில் 3 வது முயற்சியில் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். இவரது தாயார் அமுதா நாகப்பட்டினம் மாவட்ட அனைத்து மகளிர் காவல் நிலைய தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். ராமச்சந்திரன் கப்பலில் வேலை செய்து வருகிறார்.
புதுவையில் முதலிடம்
அரசு பள்ளியில் படித்த சரண்யா தனது சிவில் சர்வீஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 36 வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் முதலிடத்தை பிடித்துள்ளார்.
கலெக்டர் பாராட்டு
சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற சரண்யாவிற்கு காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாராட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன், மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மா, காவல் கண்கானிப்பாளர்கள் வீரவல்லவன், ரகுநாயகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் சரண்யாவிற்கு பொன்னாடை போர்த்தி பாராட்டினார்கள்.
மாணவர்கள் சாதிக்கலாம்
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சரண்யா "அரசு பள்ளியில் படித்ததால் அடித்தட்டு மக்களின் வாழ்க்கை முறைகளை கற்றுக்கொள்ள முடிந்தது மேலும் பல்வேறு ஊக்கங்களை கொடுத்தால் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களும் இந்த சாதனையை அடைவார்கள் என்றும், தமிழ் பிடித்த மொழி என்பதால் தமிழ் நாட்டில் தான் பணியாற்ற விரும்புவதாகவும், எதையும் சாதிக்கலாம் என்ற முயற்சியுடம் முயன்றால் சாதனைபடைக்கலாம். கிராமப்புற ஏழை, எளிய மக்களுக்காக பணியாற்ற விரும்புகிறேன்"' என்றார்.