கொரோனா தடுப்பு பணி பணியாளர்களுக்கு.. கிரண்பேடி, நாராயணசாமி கை தட்டி உற்சாகமூட்டினர்!
புதுச்சேரி: கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், ஊடகத் துறையினர் மற்றும் தூய்மை பணியாளர்களை உற்சாகப்படுத்தும் வகையில் புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் பொதுமக்கள் தங்களது வீடுகளில் நின்று கைகளை தட்டியும், மணி அடித்தும் ஊக்கமளித்தனர்.
Recommended Video
கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் இன்று நாடு முழுவதும் மக்கள் சுய ஊரடங்கிற்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருந்தார். பிரதமரின் வேண்டுகோளை ஏற்று புதுச்சேரி மாநில மக்கள் இன்று காலை முதல் தங்களின் இல்லங்களில் இருந்தபடி சுய ஊரடங்கு உத்தரவிற்கு ஆதரவு தெரிவித்தனர்.
இதேபோல் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் பணிபுரிந்து வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், ஊடகத் துறையினர் மற்றும் தூய்மை பணியாளர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பொதுமக்கள் இன்று மாலை 5 மணிக்கு தங்கள் வீட்டிற்கு வெளியே வந்து கைத்தட்டியும், மணி ஓசை எழுப்பியும் உற்சாகப்படுத்த வேண்டுமென பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.
இதனை தொடர்ந்து, இன்று மாலை 5 மணி அளவில் புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஆளுநர் மாளிகை முன்பு ஆளுநர் மாளிகை ஊழியர்களுடன் மணி அடித்தும், கைத்தட்டியும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்களை உற்சாகப்படுத்தினார். இதேபோல் முதலமைச்சர் நாராயணசாமி எல்லையம்மன் கோவில் வீதியில் உள்ள தனது வீட்டின் மாடியில் நின்ற படி கைத்தட்டி உற்சாகப்படுத்தினார். மேலும் புதுச்சேரியில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் வசிக்கும் மக்கள் கைத்தட்டியும், மணி அடித்தும் உற்சாகப்படுத்தினர்.
கைதட்டி உற்சாகப்படுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநில முதலமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரியில் இன்று இரவு 9 மணி முதல் வருகின்ற 31ஆம் தேதி முதல் 144 தடை உத்தரவு அமலாகிறது என்றும், அருகில் உள்ள கடலூர், விழுப்புரம், திண்டிவனம் மற்றும் சென்னையில் இருந்து வரும் தமிழக மற்றும் சுற்றுலா பேருந்துகள் பயணிகள் புதுச்சேரி வர அனுமதி இல்லை.
வெளி மாநிலத்தில் இருந்து புதுச்சேரிக்கு சுற்றுலாப்பயணிகள் மற்றும் வாகனங்கள் வராத வகையில் எல்லைகள் சீல் வைக்கப்படும் என்றார். மேலும் வெளி மாநிலத்தில் இருந்து அத்தியாவசிய பொருட்கள் கொண்டு வரும் வாகனங்களுக்கு தடையில்லை என்றார். மேலும் திருமணங்களை தள்ளி வைக்கவும் கோரிக்கை வைத்தார்.