ஆளுநர் ரவி மிரண்டு போய்விட்டார்! சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தருவதை தவிர வேறு வழி இல்லை -நாராயணசாமி
புதுச்சேரி: உச்சநீதிமன்றம் வைத்த குட்டால் ஆளுநர் ஆர்.என். ரவி மிரண்டு போயிருக்கிறார் என புதுச்சேரி மாநில முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பப்பட்டுள்ள 10 சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தருவதை தவிர ஆளுநருக்கு வேறு வழியே இல்லை எனக் கூறியுள்ளார். இத்தனை நாட்களாக கிடப்பில் போட்டுவிட்டு இப்போது அந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்து கையெழுத்து போட்டால் தனது சுயகவுரவம் போய்விடும் என்ற ஈகோவால் சட்ட மசோதா கோப்புக்களை திருப்பி அனுப்பியிருக்கிறார் என்றார்.

அரசியல் சட்டத்திற்கு மாறாக, ஆளுநர் ரவி மோதல் போக்கைக் கடைப்பிடித்து வருகிறார் எனவும் நாராயணசாமி விமர்சித்துள்ளார். இதனிடையே தமிழ்நாடு அரசு எடுத்துரைத்த வாதங்களைக் கவனித்துக் கேட்ட உச்சநீதிமன்றம், ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து தெரிவித்த கருத்துகள், தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு கிடைத்த முதற்கட்ட வெற்றி என முதல்வர் ஸ்டாலின் நேற்றைய தினம் தனது சட்டசபை உரையின் போது குறிப்பிட்டு பெருமிதம் தெரிவித்திருந்தார்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்திற்குத்தான் முழு அதிகாரமும் முதன்மையும் வழங்கப்பட்டுள்ளது என்பதால் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 200-இன் படி, இந்தச் சட்டமுன்வடிவுகளை மீண்டும் பரிசீலித்து, ஆளுநருக்கு திருப்பி அனுப்பும் அதிகாரம் சட்டசபைக்கு இருப்பது கவனிக்கத்தக்கது.
இதனிடையே தமிழக அரசு மீண்டும் சட்டசபையில் 10 சட்ட மசோதாக்களை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பிய நிகழ்வை பாமக வரவேற்பதாகவும் நீங்கள் எந்தக் கட்சியாக வேண்டுமானால் இருங்கள், வகிக்கும் பதவிக்கு தகுந்தாற்போல் செயல்படுங்கள் என ஆளுநர் ரவிக்கு அன்புமணி ராமதாஸ் அட்வைஸ் அளித்துள்ளார்.
சட்டமசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தராதது திமுக பிரச்சனையோ, பாஜக பிரச்சனையோ கிடையாது என்றும் அது தமிழ்நாட்டின் பிரச்சனை எனவும் குறிப்பிட்ட அன்புமணி, ஆளுநரும், அரசும் மோதல் போக்கை கைவிட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஆளுநர் ரவி திடீர் டெல்லி பயணம் மேற்கொண்டிருப்பதால் அங்கு சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தருவது பற்றி முக்கிய ஆலோசனை நடத்துவார் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications