இந்த பாட்டு தான் 10 வருசமா எனது ரிங்டோன்.. தெலுங்கானாவுக்கு போனாலும் இதான்.. ஆளுநர் தமிழிசை பேச்சு!
புதுச்சேரி : "எந்த அரசியலும் இல்லாமல் முழு உணர்வோடு பாரதிதாசனின் தமிழ்த்தாய் வாழ்த்தை பாடி அவருக்கு புதுச்சேரி அரசு பெருமை சேர்த்து கொண்டிருக்கிறது. பாரதிதாசன் பாடல்தான் எனது செல்போன் ரிங்டோனாக 10 ஆண்டுகளாக உள்ளது." என ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி அரசின் கலை, பண்பாட்டுத்துறை சார்பில் பாரதிதாசனின் 133வது பிறந்தநாள் விழா மற்றும் புதுச்சேரி கலைமாமணி விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி 10 ஆண்டுகளுக்கு பிறகு கம்பன் கலையரங்கத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ஆகியோர் கலந்து கொண்டு பாரதிதாசன் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தினர்.

தமிழிசை பேச்சு : தொடர்ந்து 2013-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரை இயல், இசை, நாடகம், நடனம், ஓவியம், சிற்பம், நாட்டுப்புற கலை ஆகியவற்றில் சிறந்து விளங்கிய 216 பேருக்கு கலைமாமணி விருது வழங்கி கவுரவித்தனர். இந்த விழாவில் பேசிய ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், "புதுச்சேரியில் 10 ஆண்டுகளுக்கு பிறகு கலைமாமணி விருது பெரும் வாய்ப்பு கலைஞர்களுக்கு கிடைத்துள்ளது. இதற்காக முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்." என்றார்.
மேலும் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், "எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு' என்ற பாடல்தான் எனது செல்போன் அழைப்பு ஒலியாக ஏறத்தாழ 10 ஆண்டுகளாக உள்ளது. தெலுங்கானாவுக்குச் சென்ற பிறகும் இதே பாடல்தான் எனது செல்போனில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
அரசியல் இல்லாமல் : பாரதிதாசனின் தமிழை தமிழ்த்தாய் வாழ்த்தாக ஒலிப்பதில் புதுச்சேரி பெருமை கொண்டுள்ளது. இன்று தமிழ்த்தாய் வாழ்த்தை வைத்தே அரசியல் நடக்கிறது. ஆனால் எந்த அரசியலும் இல்லாமல் முழு உணர்வோடு பாரதிதாசனின் தமிழ்த்தாய் வாழ்த்தை பாடி அவருக்கு புதுச்சேரி பெருமை சேர்த்து கொண்டிருக்கிறது.
மக்களுக்கான திட்டங்கள் அனைத்தும் எப்பொழுதும் நிறைவேற்றப்படும். மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற முதல்வருக்கு என்றும் உறுதுணையாக இருப்பேன். தமிழ் எங்கெல்லாம் விளையாடுகிறதோ, அங்கெல்லாம் இந்த தமிழிசை இருப்பேன்" என்றார்.
முன்னதாக, கர்நாடகா மாநிலத்தில் பாஜக பிரச்சாரக் கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தப்பட்டு அவமதிக்கப்பட்ட விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, அண்ணாமலை வருவார் அவரிடம் கேளுங்கள் என ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதில் அளித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications